திங்கள், 8 பிப்ரவரி, 2016

1. நமசிவய வாழ்க Namasivaaya Vaalga

1. நமசிவய வாழ்க

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவேஎன்பார் வள்ளல் இராமலிங்க அடிகள். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகத்தை அருளிய மாணிக்க வாசகர் திருவாசகத்தை, “நமசிவாய வாழ்கஎன்றே தொடங்குகின்றார். திருவாசகத்தின் உட்பொருள் சிவபெருமானே என்று காட்டித் தில்லை மன்றுள் நடவரசர் திருவடியில் அமர்ந்த மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில், சிவபுராணத்தின் முதல் வரியாக அமைவது, நமசிவாய வாழ்கஎனும் வரியாகும். செந்தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையானச் சித்தாந்த சைவத்தில் பரம்பொருளைச் சிவம் என்பர். அச்சிவத்திற்கு மற்றொரு பெயர், ‘நமசிவயஎனும் திருவைந்தெழுத்து என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.
பரம்பொருளான சிவத்திற்குப் பெயர் நமசிவய என்பதனை, “போற்றியோ நமசிவாய புயங்கனே மயங்கு கின்றேன், போற்றியோ நமசிவாய புகலிடம் பிரிதொன்றில்லை, போற்றியோ நமசிவாய புறமெனைப் போக்கல் கண்டாய், போற்றியோ நமசிவாய சயசய போற்றி போற்றிஎன்று மணிவாசகர் குறிப்பிடுவார். இதில் நமசிவய எனும் பெயராய் நிற்பவனே, உன்னை நான் போற்றுகின்றேன். பாம்பினை அணிந்திருப்பவனே உலக விருப்பால் மயங்குகின்றேன், உன்னை அன்றி எனக்கு வேறு புகலிடம் இல்லை. என்னைக் கைவிடாமல் காத்து அருளல் வேண்டும் வெற்றியை உடையவனே என்று குறிப்பிடுகின்றார்.
பெருமானுக்கு நமசிவய என்பது மற்றொரு பெயர் என்பதனை, “துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும், வஞ்சகம் அற்றஅடி வாழ்த்த வந்தகூற்று, அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமேஎன்று தன்னைத் தமிழ்ஞான சம்பந்தர் என்று குறிப்பிட்டத் திருஞானசம்பந்தர் பாடுவார். மார்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்தது நமசிவய என்ற திருவைந்து எழுத்தின் வடிவாக நிற்கின்ற பெருமான் என்பார்.
நமசிவய எனும் பெயரைக் கொண்ட பெருமானை வாழ்த்தினால் நாம் வாழலாம் என்பதற்காகநமசிவாய வாழ்கஎன்பார் மாணிக்கவாசகர். தமிழ்ச் சைவர்களின் மரபிலும் தமிழ்த் திருமாலியத்தவர்களின் மரபிலும் இறைவனுக்குப் பல்லாண்டு பாடும் வழக்கம் உண்டு. தமிழ்ச் சைவர்களின் தமிழ் மந்திரமான திருமுறையில், ஒன்பதாம் திருமுறையில் சேந்தனாரின் திருப்பல்லாண்டு இறைவனை வாழ்த்துவதாக உள்ளது. அதே போன்று தமிழ்த் திருமாலியத்தவர்களின் தமிழ் மந்திரமான நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலும் பெரியாழ்வார் திருமாலை வாழ்த்தும் திருப்பல்லாண்டு உண்டு. இவை நாம் வாழ்வதற்காக இறைவனை வாழ்த்துவது என்பதனை, “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்என்று திருநாவுக்கரசு அடிகளும் மணிவாசகர் குறிப்பிடுவதனைக் குறிப்பிடுவார்.
சிவபுராணத்தில், ‘நமசிவயஎன்ற திருவைந்து எழுத்தினை முதன்மையாக மணிவாசகர் குறிப்பதற்குப் பல்வேறு கரணியங்களைக் குறிப்பிடலாம். பெருமானின் திருப்பெயராக நின்ற நமசிவய எனும் திருவைந்தெழுத்து, தமிழ்ச் சைவர்களின் அரிய தமிழ் மந்திரமாக உள்ளது என்று மணிவாசகர் உணர்த்துகின்றார். நிறைமொழி மாந்தர் எனும், உள்ளத்தில் குற்றம் அற்ற மாந்தர்களின் வாய்ச்சொல்லே மந்திரம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவார். அத்தகையவர் வாய்ச்சொல் ஆணையின்படி செயல் நிகழும் என்றும் குறிப்பிடுவார். அத்தகையோரின் மந்திரச் சொற்கள் அவர்களையும் பிறரையும் காக்கும் ஆற்றல் உடையவை என்பார். அவ்வகையில் நாயன்மார்களின் திருவாய்களில் இருந்து உதிர்ந்த மொழியாகவும் அவர்களையும் பிறரையும் காத்த மந்திரமாகவும் நமசிவய உள்ளது என்பதனை மணிவாசகர் உணர்த்துகின்றார். சமணர்கள் திருநாவுக்கரசு அடிகளைக் கல்லோடு பிணைத்துக் கடலில் போட்டப் போது, “கல்துணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும், நல்துணையாவது நமசிவாயவேஎன்று நமசிவய மந்திரம் தன்னைக் காத்தமையையும் தமிழ் மந்திரத்திற்குக் கடலில் கல் மிதந்த அருள் நிகழ்ச்சியையும் குறிப்பிடுவார்.
மணிவாசகர் முதன்மைப்படுத்தும்நமசிவயமந்திரம் நம் சிந்தையைக் காப்பது என்று திருமுறைகள் குறிப்பிடுகின்றன. “அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, முந்திஎழும் பழைய வல்வினை மூடாமுன், சிந்தை பராமறியா...” என்று சுந்தரர் அடிகள் பாடுவார். சிந்தையைத் தீயவற்றில் இருந்து காத்துச் செம்மைப் படுத்துவது திருவைந்து எழுத்து மந்திரம் என்று சுந்தரர் குறிப்பிடுவார். திருநாவுக்கரசரோ தன்னைச் சமணர்கள் வெப்பமான நீற்றறையில் போட்டுப் பூட்டிய போது, “மாசில் வீணையும் எனும் பதிகம் பாடி மீண்டார். அப்போது, “மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகம் பாடினார். அப்பதிகத்தின் இரண்டாவது பாடலில், “நமசிவாயவே ஞானமும் கல்வியும் நமசிவாயவே நானறி விச்சையும், நமசிவாயவே நாநவின்று ஏத்துமே, நமசிவாயவே நன்னெறி காட்டுமேஎன்று அருளி இருக்கின்றார். இதில் நமசிவய மந்திரம் இறைவனாக நின்று உலகக் கல்வியையும் இறை அறிவையும் இறை அருளையும் நன்னெறியையும் காட்டுவதோடு நம்மைக் காக்கவும் செய்யும் என்று குறிப்பிடுகின்றார்.
பல்வேறு பிறமொழி மந்திரங்களை விளங்காமலும் வலிந்தும் கற்று ஓதும் செந்தமிழ்ச் சைவர்கள், எளிய, அரிய, மணிவாசகர் போன்ற நாயன்மார்கள் குறிப்பிட்டத் தமிழ் மொழியில் இருக்கின்ற நமசிவய மந்திரத்தை அறியாமல் இருப்பது அறியாமைக் கொடுமை எனலாம். நாயன்மார்களும் திருமுறை ஆசிரியர்களும் ஓதி உணர்ந்த, இறைவனின் திருவருள் பெற்ற, அவர்களைப் பேணிக் காத்த நமசிவய மந்திரம் தமிழ்ச் சைவர்களைக் காக்கும் என்ற நம்பிக்கை இல்லாதது எவ்வளவு பெரிய அறியாமை!
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் போன்ற அருளாளர்கள் அன்னைத் தமிழில் இறைவனின் திருமுன்பு குறிப்பிட்டு, இறைவனின் திருவருளைக் குறைவின்றிப் பெற்றமையை உணராது தமிழ்ச் சைவர்கள் பிறமொழி மந்திரங்களை உயர்வாகவும் அவையே இறைவன் பேசும் மொழி என்றும் குறிப்பிடுவதும் நம்புவதும் தமிழ்மொழி மந்திரமான நமசிவய மந்திரம் ஆற்றல் இல்லாத வெறும் மந்திரம் என்று எண்ணுவதும் எவ்வளவு பெரிய அறியாமை ஆகும்? “நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவேஎன்று தமிழ் மந்திரம் ஓதியே சுந்தரர் அருள் பெற்றமையைத் செந்தமிழ்ச் சைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமேஎன்று வேதமும் சைவமும் நன்கு அறிந்த திருஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடுவதனை உண்மையாகத் திருஞானசம்பந்தப் பெருமானைத் தங்களின் சைவ ஆசானாக வைத்துப் போற்றுகின்ற தமிழ்ச் சைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பெருமானிடத்தில் அன்பினைப் பெருக வைப்பது, அவ்வன்பினால் உள்ளம் உருகிக் கண்ணீர் மல்க வைப்பது, அம்மந்திரத்தை ஓதுகின்றவர்களை நல்ல நெறிக்கு ஆட்படுத்துவது, நான்கு வேதங்களின் முடிந்த கருத்தாய் அமைவது, பெருமானின் திருப்பெயராகவும் விளங்குவது நமசிவய திருமந்திரம் என்று சம்பந்தப் பெருமான் குறிப்பிடுவார்.
தமிழ்ச் சைவர்களின் சமய நூல்களான சிவ ஆகமங்களும் திருமுறைகளும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களும் தமிழ்ச் சைவர்களுக்குத் தலையாய மந்திரமாகக் குறிப்பிடும் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தமிழ்ச் சைவர்களின் இல்ல நிகழ்ச்சிகளிலும் அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்த வேண்டும். உண்ணும் முன்னும் உறங்கும் முன்னும் உறங்கி எழும் போதும் சொல்லிப் பழக வேண்டும். இன்பம் ஏற்பட்ட போதும் துன்பம் ஏற்பட்ட போதும் நமசிவய மந்திரத்தை மறவாமல் தவறாமல் சொல்ல வேண்டும். உள்ளத்தில் அச்சம் ஏற்பட்ட போதும் பில்லி சூனியம், காத்துக் கருப்பு, நோய், ஏவல், நாள், கோள், நேரம், சகுனம் என்று எதுவாக இருப்பினும் திருவைந்து எழுத்தினைப் படைக்கலமாகக் கொண்டு துணிவு பெறல் வேண்டும். இதனையே, “படைக்கலமாக உன்நாமத்து எழுத்துஅஞ்சு என்நாவில் கொண்டேன், துடைக்கினும் போகேன்என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்.
தமிழ்ச் சைவர்களின் புதுமனைப் புகு விழா, காதணி விழா, தமிழ்ப் பெயர் சூட்டு விழா, பூப்பெய்தல் விழா, வளைகாப்பு, திருமணம், குழந்தைப் பிறப்பு, மணிவிழா, இறப்பு என்று எதுவாக இருப்பினும் அதில் திருவைந்து எழுத்து ஓதுதலும் சொல்லுதலும் இடம்பெறல் வேண்டும். திருவைந்து எழுத்தினை ஓதி தமிழ்ச் சைவர்கள் திருநீறு அணிதலும் திருநீறு அணிவித்து வாழ்த்துதலும் செய்தல் வேண்டும். தமிழ்ச் சைவர்களின் திருக்கோயில்களில் நமசிவய திருவைந்தெழுத்து மந்திரம் பூசனையிலும் வழிபாட்டிலும் இடம்பெறுதலைச் செய்தல் வேண்டும். தமிழ்ச் சைவர்களுக்கு மந்திரம் என்றால் அது நமசிவய எனும் திருவைந்து எழுத்து மந்திரமும் திருமுறைகளும் என்பது புழக்கத்திலும் வழக்கத்திலும் இடம்பெறல் வேண்டும் என்பதே மணிவாசகர் நமக்கு உணர்த்தும் செய்தியாகும்.
மிகச் சிறந்த சிவச் செறிவாளராகிய (சிவயோகி) திருமூலரும் திருவைந்து எழுத்து மந்திரத்தின் முதன்மையை உணர்த்துவார். சிவச்செறிவாளர்களின் உள்ளத்தில் இறையுணர்வை ஏற்றும் மந்திரம் என்று குறிப்பிடுவார். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், .... ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம், தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானேஎன்று குறிப்பிடுவார். “செம்பு பொன்னாகும் சிவாயநம என்னில்என்று இன்னொரு பாடலில் திருமூலர் குறிப்பிடுவார். களிம்பு படிந்த செம்பு பொன்னாவது போல் ஆணவம் படிந்த உயிர், சிவயநம என்ற திருவைந்து எழுத்து மந்திரத்தை விடாமல் சொன்னால், பொன்னார் மேனியனாக இருக்கின்ற சிவபெருமானைப் போன்று மேம்பாடு அடையும் என்பார்.
திருவைந்து எழுத்தின் சுருங்கிய வடிவமானசிவசிவஎனும் மந்திரத்தை மாந்தர் சொல்வதற்கு அறியாமல் இருக்கின்றனர். அவர்களின் தீவினைப் பயனே அவர்களை அவ்வாறு வைத்திருக்கின்றது. அத்தகையத் தீவினைப் பயனைப் போக்குவதற்குச்சிவசிவஎன்று சொல்வதே வழி என்பதனை அறியாமல் இருக்கின்றனர் என்பார். இதனைச், “சிவசிவ என்கிலர் தீவினை யாளர், சிவசிவ என்றிடத் தீவினை மாளும்என்பார். மேலும் அவ்வாறு திருவைந்து எழுத்து மந்திரத்தைச் சொல்பவர்கள், வானவர்களாய் ஆவார்கள் என்றும் சிவகதி பெறுவார்கள் என்றும் குறிப்பிடுவார்.
சிவபுராணத்தின் முதற் சொல்லாக உள்ளநமசிவயஎன்ற திருவைந்து எழுத்தே பெருமானுக்குத் திருவடிவாக, நடவரசர் திருவடிவில் இருக்கின்றது என்பதனை  உண்மை விளக்கம் எனும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல் குறிப்பிடும். உடுக்கையை உடைய திருக்கரம் சிகாரம், நன்றாக வீசிய திருக்கரம் வகாரம், அஞ்ச வேண்டாம் என்று அமைந்த திருக்கரம் யகாரம், தீ ஏந்திய திருக்கரம் நகாரம், முயலகனைப் பொருந்தி இருக்கின்ற திருவடி மகாரம் என்று குறிப்பிடும். இதனை வேறு முறையில் குறிப்பிடுவதும் உண்டு.
மேலும் இத்திருவைந்து எழுத்தில்நடப்பாற்றல், ‘மலம், ‘சிசிவம், ‘வனப்பாற்றல், ‘யாக்கை எனும் உயிர் என்ற மெய்ப்பொருள்களைக் உணர்த்துவதாகவும் அம்மெய்கண்ட நூல் குறிப்பிடும். இத்தகைய அரிய பொருளை நமக்கு உணர்த்தவே மணிவாசகர், “நமசிவாய வாழ்கஎன்று எடுத்து ஓதினார். இவ்வரிய தமிழ் மந்திரத்தைச் செந்தமிழ்ச் சைவர்கள் தங்கள் திருகோயில்களிலும் இல்லங்களிலும் நடைபெறும் பூசனைகளிலும் வழிபாடுகளிலும் நடைமுறைப் படுத்துவார்களாக!

 இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

2 கருத்துகள்: