வெள்ளி, 8 ஜூன், 2018

37. வெய்யாய் போற்றி/ Veiyaai Podri


37. வெய்யாய் போற்றி

                சிவம் எனும் பரம் பொருள், உயிர்கள் அதன் பேர் அருளை அறிந்து அதனை அடைவதற்காகப் பொது நிலையில் இறங்கி வந்து பல்வேறு அருளிப்பாடுகளைச் செய்து வருகின்றது. அவ்வாறு அருளும் போது சிவம் உயிர்களின் நன்மைக்காக அறக்கருணையையும் மறக்கருணையையும் புரிகின்றது என்பர். சிவத்தின்  அறக்கருணை என்பது மருத்துவர் நோயாளியின் நலனுக்காக நோயாளி துன்புறும் வகையில் வாளால் அறுத்து மருத்துவம் பார்ப்பது போன்றது. சிவத்தின் அறக்கருணை என்பது உயிர்களின் நன்மைக்காக மருத்துவர் இனிப்பான மருந்தினைக் கொடுத்து நோயாளியை நலப்படுத்துவது போன்றது.

  சிவம் எனும் பரம்பொருள் மறக்கருணை புரிவதனை ஒறுத்தல் என்பர். அன்பே வடிவான சிவம் அறக்கருணை ஆற்றுகின்ற போது சினவடிவம் கொண்டு  வெப்பமுடையதாக நின்று உயிர்களுக்கு அருள் புரியும் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனையே மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில், சிவபுராணப் பகுதியில், “வெய்யாய்” என்று குறிப்பிடுகின்றார். பெருமான்  சினங்கொண்டு மறக்கருணை புரிந்த பான்மையை வீரச்செயல்கள் என்று குறிப்பிடுவர். உயிர்களுக்கு அருள்புரிவதற்கும் அவற்றிற்கு நல்லறிவு புகட்டவும் பெருமான் எண்ணில் அடங்கா வீரச்செயல்களை நாளும் நாளும் இயற்றினாலும் உயிர்களுக்கு மிக இன்றியமையாதனவாகக் கருதப்படும் எட்டு வீரச்செயல்கள் மட்டுமே இங்குச் சுட்டப்பெறுகின்றன.

பெருமான்  நிகழ்த்திய மறக்கருணை அருள் வரலாறுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பிய நம் முன்னோர், குறிப்பிட்டத் தலங்களில் அமைத்து வழிபட்டச் சிவலிங்கங்களுக்கும் அச்சிவலிங்கங்கள் அமைக்கப்பெற்றத் திருக்கோயில்களுக்கும் பெருமானின் அவ்வருட்செயல்களைப் பொருத்தி, அவ்வருட்செயல்களுக்குரிய பெயர்களையும் அவற்றிற்கு இட்டு, குறிப்பிட்ட அருள் செயல்கள் அங்கு நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டு வழிபட்டனர். இவ்வாறே தலபுராணங்கள் அமைந்தன என்று மகாவித்துவான் அருணைவடிவேல் அவர்கள் குறிப்பிடுவார்கள். அவ்வருட்செயல்களுக்கு ஏற்றவாறே பெருமானும் அச்சிவலிங்கங்களிலும் அத்திருக்கோயில்களிலும் நின்று அருளுகின்றான் என்பது வரலாறு. இவ்வகையிலே அமைந்த எட்டு வீரத்தானங்களைத் திருமுலர் குறிப்பிடுவார்.

      யான் எனது எனும் அறியாமையை உண்டாக்கும் ஆணவ மலம் என்ற அக இருளினை ஒத்த அந்தகன் என்ற தீயப் பண்புடைய ஒருவனைப் பெருமான் வைரவக் கடவுள் வடிவத்திலே சென்று மூவிலைச் சூலத்தின் நுனியில் ஏற்றித் துன்புறுத்தி அழித்தது திருக்கோவலூர் எனும் வீரத்தானத்தில் என்று குறிப்பிடுவர். விருப்பம், செயல், அறிவு (இச்சை, கிரியை, ஞானம்) என்ற மூன்றினைத்( மூவிலைச் சூலம்) தன் அருள் ஆற்றலாய்க் கொண்டு, உயிர்களின் ஆணவத்தினைப் பெருமான் ஒடுக்குகின்றான் என்ற உண்மையைப் புலப்படுத்துவதற்கு இத்தானத்தைக் குறிப்பிடுவர். யான் எனது எனும் செருக்கினால் பிற உயிர்களுக்கு எப்போதும் துன்பத்தையே உண்டாக்கும் உயிர்கள் அந்தகனைப் போன்று இறை ஆற்றலுக்கு அடங்கும் நாள் வந்தே தீரும் என்ற அரிய செய்தியினைத் திருக்கோவலூர் திருக்கோயில் உணர்த்துகின்றது என்பதனை உணர்ந்து அன்பர்கள் வாழ வேண்டும் என்று மணிவாசகர் தெளிவுபடுத்துகின்றார்.

      அண்டங்களை எல்லாம் கடந்து வெளிக்கு மேலாயும் எல்லாப் பொருளுக்கும் இடம் கொடுத்தும் பூமியினும் கீழாய் நின்று அனைத்தையும் தாங்கி நிற்கின்ற பெருமானின் பேர் ஆற்றலை உணராது  இறைவன் இட்ட பணியைச் செய்யும் பிரமன், தான் செய்யும் படைத்தல் தொழிலால் செருக்குற்று இறைவனைப் பணிதலில் இருந்து மாறுபட்டான். பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை அரிந்து இதர தேவர்களுக்கும் உண்மையை உணர்த்திய இடமான திருக்கண்டியூரில் பெருமான் ஒரு வீரச்செயலை நிகழ்த்தியதைக் குறிப்பிடுவர். இறைவன் அளித்தவற்றைக் கொண்டு இப்பூவுலகில் வாழும் நாம், நாமே அனைத்தையும் செய்கின்றோம், நம் திறத்தாலும் நம் பேர் அறிவாலுமே அனைத்தையும் நடத்துவிக்கின்றோம் என்ற செருக்கினால் வாழக்கூடாது என்ற படிப்பினையை இத்தானத்தின் வீரச்செயலைக் குறிப்பிடுவதன் வழி உணர்த்துவர். இதனையே மணிவாசகரும் நினைவுறுத்துவார்.

      தன்னாலேயேதான் தனக்கு அழிவு எனும் வரம் பெற்ற சலந்தரன் என்பவன் எவருக்கும் பணியாது எல்லோரையும் துன்புறுத்த, அவன் அறியாமையைக் கொண்டு பெருமான் அவனை அழித்தார். ஒரு சான்றோன் வடிவிலே சென்று அவனின் ஆற்றலைக் காணவேண்டுவதாய்க் கூறித் தன் திருவடியால் நிலத்தில் கீறிய சக்கரத்தினைத் தூக்க இயலுமா என்று கேட்க, சலந்தரன் தன் அறியாமையினால் அம்மண்சக்கரத்தினைத் தன் தலைக்கும் மேலாகத் தூக்க, அதுவே சக்கரமாய் மாறி அவன் உடலை இரண்டாகப் பிளந்தது. இவ்வரலாற்றினை விளக்கும் பெருமானின் வீரச்செயல் திருவிற்குடி யில் இடம்பெற்றது என்பர். தங்கள் உடல் வலிமையால், பணத்தால், பதவியால், பட்டத்தால், படிப்பால், அழகால், திறமையால், குலப்பெருமையால் செருக்குற்றுத் திரியும் சிலரின் பண்பினை ஒத்த முப்புரவாதிகளின் ஆணவம், கன்மம், மாயை (பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள்) ஆகிய அறியாமையை ஒரு சினந்த சிரிப்பில் பெருமான் அழித்த வீரச்செயல் திருவதிகை வீரத்தானத்தில் நிகழ்ந்ததைக் குறிப்பிடுவர்.

      முனிவர் சிலர் செய்த வேள்வியில் தோன்றிய யானை வடிவினனாகிய கயாசுரனை யாரும் அழிக்க இயலாதபோது சிவபெருமான் ஒருவரே அழித்து அவனுடைய யானைத் தோலைப் போர்த்தார் என்ற திருவழுவூர் வீரத்தான வீரச் செயலக் குறித்துச் சிவமே பரம்பொருள், சிவனை மற்ற தேவர்களுள் ஒன்றாக வைத்து எண்ணக் கூடாது என்ற உண்மையை வலியுறுத்துவர். சிவனையே பற்றுக்கோடாகக் கொண்டு, சிவநெறியில் ஆழ்ந்து சிவனின் திருவருளுக்கு ஆளாகின்றவர்களைச் சாதாரண மக்களைப் போன்று காலனால் அவர்களின் உயிரை உடலிலிருந்து பிரிக்காமல் சிவனே வந்து அழைத்துச் செல்வான் என்ற உண்மையை உணர்த்தும் மார்கண்டேயருக்காகக் காலனைக் காலால் பெருமான் உதைத்தத் திருக்கடவூர் வீரச் செயலை நினைவில் கொள்ள வேண்டும் என்று மணிவாசகர்  குறிப்பிடுகின்றார்.

      சிவனை மதியாத, சிவவேள்வி அல்லாத அவவேள்வியைச் செய்த தக்கனையும் அவ்வேள்விக்குச் சென்ற தேவர்களையும் கண்டித்துத் திருப்பறியலூர் வீரத்தானத்தின் வழி சிவ வேள்வி அல்லாத பிற வேள்விகள் சைவர்களுக்கு உரியது அல்ல எனவும் சைவர்கள் சிவவேள்வி அல்லாத வேள்விகளில் பங்கேற்றல் கூடாது என்றும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் புலப்படுத்துகின்றன.  பரம்பொருள் பற்று அற்றவன், அவனைப் பற்று அண்ட இயலாது என்பதனைக் திருக்குறுக்கை வீரத்தானத்தில் காமனை எரித்த வரலாற்றினைக் கூறி உணர்த்துவர்.
இறைவனின் மறக்கருணைச் செயல்களை நினைவுறுத்தி, சிவநெறிக்கு மாறானவற்றைச் செய்பவர்கள் பெருமானின் சினத்திற்கு ஆளாகித் துன்புற  நேரிடும் என்பதனை மறந்து விடக் கூடாது என்பதனை உணர்த்தவே மணிவாசகர் வெய்யோன் என்று குறிப்பிடுகின்றார். இறைவனிடத்திலேயும் அவன் உறையும் உயிர்களிடத்தும்  அன்பைப் பெருக்கிச் சிவநெறியில் வழுவாது நின்று அப்பெருமானின் திருவருளுக்கு ஆளாவோமாக! 
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!