புதன், 8 ஜூலை, 2020

40. விமலா போற்றி/ Vimala Podri


40.   விமலா போற்றி

                ஆணவம், கன்மம், மாயை என்பனவே மும்மலங்கள் எனப்படுகின்றன. இம்மும்மலங்களைத் தமிழில் தளைஎன்கின்றனர். வடமொழியில் பாசம்என்கின்றனர். உயிரின் அறிவு, விருப்பு, செயல்களை இயல்பாக நிகழவிடாமல் தடைசெய்து, உயிரினைத் தளைத்து (கட்டி) வைத்திருப்பவை ஆதலினால் மும்மலங்களைத் தளைஎன்றனர். எனவேதான் தொல்லை இரும் பிறவிச் சூழும் தளை நீக்கி, அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதேஎன்று திருவாசகத் தேனைக் குறிப்பிட்டனர். பன்னெடுங்காலமாக நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் வன்மையான பிறவிக் கட்டினை அறுத்து இன்பம் அளிப்பது திருவாசகம் என்று குறிப்பிட்டனர்.
                உயிரின் அறியாமைக்கும் துன்பங்களுக்கும் மூலகாரணமாக எது இருக்கின்றதோ அதுவே மும்மலங்களின் ஒன்றான ஆணவமலம் எனப்படுகின்றது. நாம் வாழும் இவ்வுலகம் அழிவு அடையக் கூடியது அல்லது மாற்றம் அடையக் கூடியது. இவ்வுலகில் இருக்கின்ற இன்பங்கள் நிலைத்த இன்பம் அளிக்கக் கூடியவை அல்ல என்பது பெறப்படும். ஆனால் உலகம் நிலைபேறு உடையது, நிலைத்த இன்பத்தை அளிப்பது என்று உண்மைக்கு மாறாகக் கொண்டு உயிர் அதில் விரும்புக் கொண்டு நிற்கின்றது. இந்நிலைக்கு காரணம் எதுவோ அதுவே ஆணவமலம் எனப்படுகிறது.
               கண்ணின் ஒளியை மறைக்கும் புற இருள் போல, உயிரின் அறிவை மறைக்கும் அக இருள்தான் ஆணவமலம். உயிரின் அறிவு, விருப்பு, செயல்களைத் தடைசெய்து கட்டுப்படுத்தும் தன்மையுடையதாய பொருள் ஆணவமலம். புறத்திலே நாம் காணும் இருள் ஆனது ஒரு பொருளையும் காட்டாது. ஆயினும் இருண்ட கரு நிறமாகிய தன் இயல்பினையாவது காட்டும். ஆனால் ஆணவமாகிய அக இருள், புறப்பொருளை மட்டுமல்லாது தன் இயல்பினையும் காட்டாது என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும். இருள் கண்ணொளியை மறைக்கும். ஆனால் அதனால் கதிரவனின் ஒளியை மறைக்க இயலாது. அது போல ஆணவமலம் உயிர் அறிவை மறைக்க இயலுமே தவிர இறையுணர்வை அல்லது இறையறிவை மறைக்க இயலாது. எனவேதான் இறைவன் ஆணவ மலத்திலிருந்து இயல்பாய் நீங்கினவன் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனையே மணிவாசகர் சிவபுராணத்தில் விமலா என்றார். விமலா என்றால் மலம் நீங்கினவன் என்பது பொருள்.
                ஆணவமலத்திற்கு இருவகை ஆற்றல் உண்டு. ஒன்று மறைக்கும் ஆற்றல். மற்றொன்று கீழ்நோக்கிச் செலுத்தும் ஆற்றல். ஆணவமலத்தின் மறைப்பாற்றலால் உயிர் தன்னையும் அறியாது. தன்னை இயக்குகின்ற இயவுளாகிய சிவத்தையும் அறியாது, தனக்கு அறியாமையைச் செய்து கீழ்ப்படுத்துகின்ற ஆணவத்தையும் அறியாது. இதனாலேயே திருமூலர், “தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை, தன்னை அறியாமல் தானே கெடுகின்றான், தன்னை அறியும் அறிவை அறிந்த பின், தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானேஎன்பார்.
                அதாவது திருவருளால் ஆணவத்தை நீக்கித் தனக்குத் தலைவனாகிய சிவபெருமானை அறியத் தன்னை அறியும் உயிராகிய தனக்கு எஞ்ஞான்றும் பிறப்பு இறப்புக்களாகிய கெடுதல் உண்டாகாது என்கின்றார் திருமூலர். தன் தலைவனை அறியும் தனியறிவை உயிர் அறிந்தபின் தன் தலைவனாகிய சிவ பெருமானை அர்ச்சிக்கும் என்கின்றார் திருமூலர். உயிர்களுக்குத் தன் அறிவை மறைத்துக் கீழ்நோக்கிச் செலுத்தும் ஆணவமலம் இருப்பதனால் தான் அறியாமை எனும் பலவீனத்தால் உயிர்கள் பல்வேறு குற்றங்களுக்கு உள்ளாகின்றன. இதனாலேயே அது எதிலும் எவ்விடத்திலும் யான், எனதுஎனும் செருக்குடனும் தான்எனும் முனைப்புடனும் நிற்கின்றது. இவ்வியல்புகள் இறைவனைப் பற்றுவது கிடையாது.
                எல்லாவற்றிலும் தானே சிறப்புடையவன், தன்னுடையதே சிறப்புடையது என்று உயிர்கள் காட்டும் முனைப்பினை இறைவன் காட்டுவதில்லை. உயிர்கள் விரும்பும் புகழுக்கும் பேருக்கும் இறைவன் மயங்குவதில்லை. இறைவன் தன் பேர் ஆற்றலையும் பேர் அறிவையும் உயிர்களிடத்தே காட்டி அடைய வேண்டியது ஒன்றும் இல்லை. உயிர்களுக்குப் பிறரால் ஆக வேண்டிய செயல்கள் இருப்பது போல, இறைவனுக்கு உயிர்களால் ஆக வேண்டிய செயல்கள் எதுவும் இல்லை. உயிர்களைப் போன்று அறியாமையால் இறைவன் தவறுகள் செய்வதில்லை. பின் வருந்துவதும் இல்லை. நம்மைப் பழிவாங்குவது இல்லை. நம்மைத் துன்புறுத்தி மகிழ்வதுவும் இல்லை. நடிப்பு இல்லாமல் என்றும் ஒருபடித்தாகவே இருக்கின்றான். நிலைத்த இன்பமுடைய பொருளான அவன் நிலையற்ற பொருள்களையும் நிலையில்லாத இன்பமுடைய பொருள்களையும் விரும்புவதில்லை என்று மணிவாசகர்  குறிப்பிடுகின்றார்.
கடவுளைப் போன்றே உயிரும் தளையும் அநாதிப்பொருள் (என்றும் உள்ள பொருள்) என்று சைவம் குறிப்பிடுகின்றது. ஆயினும் உயிரைத் தளை பற்றுவபோல் கடவுளைப் பற்றுவதில்லை. பற்றவும் இயலாது என்பதனைப், “பதிபசு பாசம் எனப்பகர் முன்றில், பதியினைப் போல்பசு பாசம் அனாதி, பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம், பதி அணுகில் பசு பாசம் நிலாவேஎன்று தமிழ் ஆகமம் அருளிய திருமூலர் குறிப்பிடுவார்.
                பதியாகிய இறையும் பசுவாகிய உயிரும் பாசமாகிய தளையும் அப்பதியினைப் போல் என்றும் உள்ளவை. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் கட்டுண்ட உயிரும், சடப்பொருளான அறியாமையைச் செய்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் இறைவனை அணுக முடிவதில்லை. கடவுளின் திருவருளைத் துணையாகக் கொண்டு உயிர் கடவுளை அணுகுமாயின் உயிரைப் பற்றியுள்ள மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்பன தம் முனைப்பு இல்லாமல் கெட்டு ஒடுங்கும் என்று திருமூலர் தெளிவு படுத்துகின்றார்.
                மும்மலங்களில் இரண்டாவது மலமாகிய கன்மம் அல்லது செயல் அல்லது வினை என்பது கடவுளைப் பற்றுவது கிடையாது. ஆணவம் என்ற மலத்தினைப் போக்குவதற்குக் கன்மமலமும் மாயாமலமும் இறைவனால் சேர்த்து வைக்கப்பட்டவை என்று தமிழர் சமயமான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்களுக்குப் பிறவிகள், உடல்நிலை, வாழும் உலகம், அறிவு நிலை, நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளுக்குக் காரணம் வினைப் பயனே என்று சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்கள் என்னதான் முயன்றாலும் அது நிறைவேறும் காலம் வரும் வரைக்கும் அம்முயற்சி நிறைவேறாமல் நிற்பதற்குக் காரணம் வினைப் பயனே என்று சைவம் குறிப்பிடுகின்றது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்என்பதும் வினைக்கொள்கை அடிப்படையில்தான். வினைப்பயன் இருப்பதனால்தான் அறநெறிப்படி வாழ்கின்றவருக்கு நன்மையும் அறநெறிப்படி வாழாதவருக்குத் தீமையும் நிகழும் என்ற கோட்பாடு கூறப்பட்டுள்ளது.
நற்செயல்கள் செய்வதனை நல்வினை என்றும் தீச்செயல்கள் செய்வதனைத் தீவினை என்றும் சைவம் குறிப்பிடுகின்றது. இவற்றின் பயனே நமக்கு இன்ப துன்பங்களாய் மாறி மாறி வருகின்றன. உலகில் காணும் உயிரினங்களிடையே ஊனமுற்றவர்களையும், முழுமைபெற்றவர்களாயும், அறிவாளிகளாகவும் அதற்கு மாறாகவும், செல்வர்களாகவும் வறியவர்களாயும் நம் முயற்சிக்கு அப்பாற்பட்டு கிடைக்கப் பெறுவது இவ்வினைப் பயனை ஒட்டியே என்று சைவம் குறிப்பிடுகின்றது.
                உயிர்கள் மனம், வாக்கு, காயம் என்பனவற்றால் வினைகளைச் செய்கின்றன. அதனால் வரும் பலன்களை நுகர்ந்து கழிக்கின்றன. மனத்தால் எண்ணும் எண்ணங்கள் செயல்களே அல்லது வினைகளே என்று சைவம் குறிப்பிடுகின்றது. தீய எண்ணங்கள் தீய செயல்களாகவும் நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களாகவும் குறிக்கப்பெறுகின்றன. நல்ல சொற்களும் தீய சொற்களும் அவை அவற்றிற்குரிய பலன்கலைத் தருகின்றன. எனவே காயம் என்ற உடலால் செய்யும் செயல்கள் தான் வினை என்று எண்ணுதல் தவறு.
                எனவே மனம், வாக்கு, காயம் என்ற மூன்றினால் செய்யும் செயல்களை ஆணவ மலம் பிணித்து இருப்பதனால் உயிர் மனத்தாலும் சொற்களினாலும் உடல் செயல்களினாலும் பல தவறுகளைச் செய்கின்றன. இவற்றிற்குத் துணையாக ஐம்புலன்களாகிய கண், காது, மூக்கு, வாய், மெய் என்பன செயல்படுகின்றன. தவிர உட்கருவிகளான மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் மனவெழுச்சியும் துணைநிற்கின்றன. இப்படி அறியாமையால் செய்கின்ற மன, வாக்கு, காயச் செயல்களுக்கு உயிர்கள் அவற்றின் பயனை நுகர்ந்தே தீர வேண்டும்.
அறியாமையால் செய்யும் செயல்களைக் கடவுளின் திருவருளாலும் திருவடி உணர்வாலும் மட்டுமே நிறுத்த இயலும் அல்லது சிவநல்வினையாய் மடைமாற்றம் செய்ய இயலும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. அதுவரையில் வினைப்பயனை நுகர்ந்தே தீரவேண்டும் என்கிறது. அதனாலேதான் கன்றுக் குட்டியைத் தேர்க்காலில் மடித்தத் தன் மகன் செய்த தீவினைக்குப் பரிகாரம் செய்யாது அத்தாய்ப்பசு அடைந்த துன்பத்தைத் தான் நுகர்ந்து போக்கிக் கொள்ள வேண்டும் என்று தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றார் மனுநீதிச் சோழர் என்பார் தெய்வச் சேக்கிழார்.
                அறியாமையால் மனம், வாக்கு, காயத்தால் பெருமான் தாக்குறுவதில்லை. அதனால் பெருமானிடத்தில் தீய எண்ணங்கள் அண்டுவதில்லை. தீய மொழிகள் பெருமான் திருவாயில் உதிப்பதில்லை. பெருமானின் திருவருட் செயல்கள் எல்லாமே அருட் செயல்களே. உயிர்களின் வினைகளுக்கு ஏற்பவே அவை நல்லனவாகவும் தீயனவாகவும் நுகர்ச்சிக்கு வருகின்றன. பெருமான் உயிர்களைப் போன்று ஐம்புலன்களால் தாக்குறுவது இல்லை. இதைத்தான், “பொறிவாயில் ஐந்துஅவித்தான்என்று இறைவனை வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவார். ஐம்பொறிகளின் வாயிலாக ஏற்படும் வேட்கைகளையும் அவற்றினால் ஏற்படும் தவறுகளையும் வென்றவன் இறைவன் என்கிறார். நல்வினையும் தீவினையும் நீங்கினாலே நமக்குப் பிறவி விடுதலைக் கிடைக்கும் என்பது சைவக் கொள்கை. ஒன்று பொன் விலங்கு மற்றது இரும்பு விலங்கு. இரண்டுமே உயிர் பிறவியிலிருந்து விடுபடுவதற்குத் தடையானவைதான். எனவேதான் அவற்றை இருள்என்று திருவள்ளுவர் உருவகித்தார். இறைவன் இயல்பாய் வினை நீங்கினவன் என்பதனை, “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்என்றார்.                                     
                மா என்றால் ஒடுங்குதல் என்றும் யாஎன்றால் தோன்றுதல் என்றும் பொருள்படுகின்றது என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும். எனவே மாயை என்பது எல்லாப் பொருள்களும் ஒழுங்குதற்கும் தோன்றுதற்கும் எது மூலப் பொருளாக இருக்கின்றதோ அதுவே மாயை எனப்படுகின்றது என்று சிவத்தை முழுமுதற் பொருளாகச் சொல்கின்ற சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. புல், பூடு, புழு, மரம், விலங்கு, பறவை, பாம்பு, கல், மாந்தர், பேய், கணங்கள், அசுரர், வானவர், முனிவர் போன்ற உயிர்களுக்கு உரிய உடல், கருவி, உலக நுகர்ச்சிப் பொருள்கள் யாவும் இம்மாயை என்னும் மூலப் பொருளிலிருந்தே ஆக்கப்படுகின்றது என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது.
                மரம், செடி, கொடி போன்ற நகரா உயிரினங்களின் உடல்களும் பறவை, பாம்பு, புலி, மீன், பூச்சி, மாந்தர் போன்ற நகர்ந்து இயங்கும் உயிர் வகைகளின் உடம்புகளும் இம்மாயை எனும் பொருளாலேயே ஆக்கப்படுகின்றன. இவ்வுடம்புகள் பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, பசி என்பனவற்றிற்கு உள்ளாகி அல்லல்படும். துன்புறும், சிறுக்கும், பெருக்கும் அழிந்துபடும். நீர், நிலம், தீ, காற்று, ஆகயமான ஐந்து வகைப் பூதங்களுக்குத் தாக்குற்று தமது நிலையில் இருந்து சீர் கெடும், மாறும் அழியும். உயிர்களின் உடம்பிற்கு இளமைக் கால உடல் முதுமைக் கால உடல் என்ற மாற்றமும் தோற்றமும் உண்டு. உயிர்களின் உடம்பிற்கு நோய் ஏற்படுவது உண்டு. இறப்பு ஏற்பட்டு உடல் அழிவது உண்டு. கடவுளின் உடல் எனப்படும் திருமேனி மாயையால் ஆகியது அல்ல. அது இறைவனின் திருவருளால் ஆனது. இறைவன் தனது திருவருளையே தமக்குத் திருமேனியை அமைத்துக் கொள்வதற்குத் துணையாகக் கொள்கின்றான்.
                எனவேதான் கடவுளைப், “பிறவா ஆக்கைப் பெரியோன்என்கிறார்கள். அதாவது இறைவனின் திருவுடம்பு பிறவிக்கு உட்படாதது என்பதாகும். இயல்பாய் மாயையிலிருந்து இறைவன் நீங்கினமையால் திருவருளால் ஆகிய அவன் திருமேனி மூப்பு அடைவதில்லை. அதனாலேயே கடவுளை, “மூவா முதல்வா பொற்றிஎன்று அருளாளர்கள் போற்றுகின்றனர். இறைவனைப் பசிக்கொடுமை வாட்டுவதில்லை. இறைவனை நீர், நிலம், தீ, காற்று, வெளி என்பவை துன்புறுத்துவதில்லை. அழிக்கவும் முடிவதில்லை. நிலைத்த பொருளாக என்றும் மாற்றம் இன்றி இறைவன் ஒளிவிடுகின்றான். ஒளிப் பிழம்பாய் என்றும் மாற்றம் காணாது ஒருபடித்தாய் இருக்கின்ற பெருமானை, இதுபற்றியே, “நொந்தா ஒண் சுடரேஎன்று சுந்தரமூர்த்தி அடிகள் போற்றிப் புகழ்ந்தார்.
                உயிர்களுக்குப் பொறுத்தப்பட்டுள்ள மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்று சொல்லப்படுகின்ற கருவிகளும் மாயையினாலேயே ஆக்கப்பட்டுள்ளன. உயிர்கள் இறைவனின் திருவடிப் போற்றினை அடையும் போது மாயையினால் ஆகிய இவை நீங்கிப் போகும். பெருமானின் திருவருள் என்ற ஒன்றை மட்டும் துணையாகக் கொண்டு உயிர்கள் இறையின்பத்தை நுகரும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. எனவே மாயையினால் ஆன கருவிகள் இறைவனுக்குக் கிடையாது.
கை, கால், எருவாய், கருவாய், வாய் ஆகிய மாயையினால் ஆகிய செயல் கருவிகள் இறைவனுக்குக் கிடையாது. இதனால் வினைகளை இக்கருவிகளைக் கொண்டுச் செய்ய வேண்டும் என்ற ஒன்று இறைவனுக்கு இல்லை. இறைவன் நினைத்த அளவிலேயே அனைத்தையும் இயற்ற இயலும். அடியார்கள் வரலாரற்றில் பெருமான் நிகழ்த்துவது எல்லாம் மாந்தர் என்ற சட்டையை அணிந்து வருதல் போல் ஆகும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. எனவே அறிகருவிகள், செயல் செய்கின்ற கருவிகள் என்ற மாயையால் ஆகியவற்றை இறைவன் நீங்கினவன் என்று புலனாகிறது.
                உயிர்கள் கடைத்தேறுவதற்கு மாயையினால் ஆகிய நுகர்ச்சிப் பொருள்களை இறைவன் படைத்து நமக்கு அளித்திருக்கின்றான். நீர், நிலம், தீ, காற்று, வெளி, கோள்கள், விண்மீன்கள், பொன், பொருள், பிற உயிர்வகையினால் கிட்டும் நுகர்ச்சிகள் இவையாவும் மாயையினால் ஆக்கப்பெற்றிருக்கின்றன. இவற்றின் மூலம் இறைவன் உயிர்களுக்கு பிறவிகள் தோறும் செவ்வியை (அனுபவத்தை) அளித்துத் தேற்றுகின்றான். மாற்றம் அடையக் கூடியதாகவும் அழியக் கூடியதாகவும் உள்ள இந்நுகர்ச்சிப் பொருள்களைக் கொண்டே உயிர்கள் அறிவு பெற்று இறைவனைப் புரிந்து கொண்டு பிறவிக்கடலை நீத்த வேண்டியவையாக இருக்கின்றன. பெருமானுக்கு மாயைப் பொருளினால் ஆகிய நுகர்ச்சிப் பொருள்களினால் கிட்ட வேண்டிய செவ்வி (அனுபவம்) தேவையில்லை! பெருமானே அப்பொருள்களைத் தோற்றவும், நிற்கவும், அழிக்கவும் செய்கின்றான்.
இவ்வாறு மாயையால் ஆகிய மாற்றம் அடையக் கூடிய பொருள்களை நிலையானவை என்று எண்ணுகின்ற மயக்கத்தினையே மாயா மலம் என்றும் குறிப்பிடுவர். இம்மாயா மலம் உண்மை அல்லாதவற்றை, நிலை இல்லாதவற்றை உண்மைப் பொருள் போன்றும் நிலைத்தப் பொருள் போன்றும் மயக்கினை ஏற்படுத்தும். இம்மாயா மலம் செய்யும் மயக்கம் உயிருக்கு ஏற்படும். இதனாலேயே உலக உயிர்கள் நிலை இல்லாத உலகப் பொருட்களின் பாலும் தெவிட்டி விடக்கூடிய சிற்றின்பங்கள் பாலும் அளவற்றப் பற்று கொண்டு, வாழ்நாளைக் கழிக்கின்றன. இம்மயக்கம் பெருமானைப் பற்றுவது கிடையாது. மயக்கத்தைச் செய்யும் மாயா மலம் பெருமானை மயக்குவது கிடையாது. இதனாலேயே பெருமானை மயாமலம் நீங்கினவன் அல்லது விமலா என்று மணிவாசகர் குறிப்பிடுன்றார்.
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

திங்கள், 6 ஜூலை, 2020

39. உயிராய் நிற்பவனே/Uyiraai Nirpavane


39. உயிராய் நிற்பவனே

இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு பொருளாய் இருக்கின்றான் என்று சிவ ஆகமங்களும் திருமுறைகளும் மெய்கண்ட நூல்களும் குறிப்பிடுகின்றன. உயிர்களின் மீது கொண்ட பரிவின் கரணியமாகக் பரிவே வடிவமான அப்பரம்பொருள் உயிர்களின் நலம் பொருட்டுத் தானாகவே தனது சிறப்பு நிலையிலிருந்து பொது நிலைக்கு இறங்கி வந்தது என்று சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடும். அகலமாய அறிவரிது சகலமாய் வந்ததென உந்தீபற, தானாகத் தந்தது என உந்தீபறஎன்று இக்கருத்தினைத் திருவுந்தியார் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடும்.
மேல்நிலையிலிருந்து இறங்கி வரும் பரம்பொருள் உலக உயிர்கள் தன்னை அறிந்து உய்தி பெறும் வகையில் உயிர்களின் செவ்விக்குப் (பக்குவத்திற்கு) ஏற்ப பல்வேறு வகைகளில் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு வந்து அருள்புரிகின்றது என்று குறிப்பிடுவர். உயிரின் செவ்வியானது அதன் அறியாமையை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகின்றது. இவ்வறியாமையைப் போக்கிக் கொள்ள உயிர்கள் வினை எனும் செயல்களை ஆற்ற வேண்டி உள்ளமையால் உயிர்களின் அறியாமையை வினை என்றே குறிப்பிட்டனர். பொது நிலைக்கு இறங்கி வந்து உயிர்களுக்கு உதவும் பரம்பொருள் உயிர்களின் வினைக்கேற்பத் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு வந்து அருள் புரிகின்றது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பொது நிலைக்கு இறங்கி வருகின்ற அப்பரம்பொருளின் திருவருளைச் சத்தி என்று குறிப்பிடுவர். இறைவனின் ஆற்றலும் அருளுமான சத்தி எல்லா உலகங்களையும் அவற்றிலுள்ள பொருள்களையும் ஆக்கி, நிறுத்தி, இளைப்பாறச் செய்து, மறைத்து, ஒடுக்கி அருள்புரிகின்றது. உலகப் பொருள்கள் எல்லாவற்றிலும் விரவி இருப்பதோடு அல்லாமல் எல்லா உயிர்களிலும் பிரிப்பின்றி கலந்து நின்று அவற்றை இயக்கிக் காக்கும் சத்தியாயும் உள்ளது. இதனை, “விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்க்கொண்டுஎன்று குறிப்பிடுகின்றார் திருமூலர்.
பொதுநிலைக்கு இறங்கி வரும் பரம்பொருளின் திருவருளை, ஆற்றலை, சத்தி என்று பெண் வடிவம் கொடுத்து வழிபட்டமையால் சத்தி என்பது தனிப் பெண் கடவுள் என்று சிலர் உண்மையை உணராமல் குறிப்பிடுவர். அரன் தனக்கு அருளது சத்தியாகும், எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்என்று திருவருட்பயன் என்ற மெய்கண்ட நூல் இதனைத் தெளிவு படுத்தும். எனவே இறைவனின் திருவருளான சத்தி இறைவனின்று சற்றும் மாறுபடாது இறைவனின் திருநோக்காகவே செயல்படும். இப்படி உலக உயிர்களிலும் உலகப் பொருள்களிலும் அவற்றினோடு கலக்கும் வகையால் ஒன்றாயும், அவற்றைச் செலுத்தும் வகையால் உடனாயும் பொருள்வகையால் வேறாகவும் பிரிப்பின்றி நின்று காத்து நிற்கின்றது. உயிர்களை அன்பினால் கசிந்து கசிந்து உருகச் செய்து அவற்றின் வினை முழுவதையும் போக்கித் தனது இணையற்றத் தனிப் பேரின்பத்தைக் கொடுப்பதற்காக உயிரில் பெருமான் தங்கி இருப்பதனால் இறைவனை உயிர் ஆனான் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். இதனைச் சிவபுராணத்தில் இயமானாய் என்று குற்றிப்பிடுக்கின்றார். இயமானன் என்பது உயிரைக் குறித்து நிற்கின்றது.
உலக உயிர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்ற நோக்கம் இல்லாது தன் திருவருளைத் தன் உள்ளே அடக்கி வைத்திருக்கும் பெருமானின் திருவருளை அல்லது ஆற்றலைப் பராசத்தி என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்நிலையை உலகை நோக்காது உள்நோக்கிய நிலை என்பர். பெருமானின் திருவருளான, உள்நோக்கிய நிலையில் பராசத்தி என்று குறிப்பிடப்படும் நிலையிலிருந்து உலக முகமாக உயிர்களுக்கு அருள்புரிய, உலகைத் தொழில்படுத்த இயங்கும் பெருமானின் திருவருள் ஆற்றலுக்கு ஆதிசத்தி என்று பெயர். உயிர்கள் தங்கள் அறியாமையைப் போக்கிக் கொண்டு இறைவனிடம் இருக்கின்ற பேரின்பத்தை அடைவதற்குச் செயல்கள் செய்து அன்பின் பிழம்பாய்க் கசிந்து உருகுவதற்குப் பக்குவம் அல்லது செவ்வி அடைய வேண்டும் என்பதனால் இறைவனின் ஆதிசத்தியானது உயிர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே இறைவனைக் காட்டாது உலகத்தின் மீது பற்றுக்கொண்டு உலக முகமாகவே செலுத்தி நிற்கும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.
உலகப் பொருள்களை அழுந்தி அறிகின்ற பட்டறிவினாலேயே உயிர்கள் செவ்வி அல்லது பக்குவம் அடைய முடியும் என்பதனால் இறைவனின் திருவருளான ஆதிசத்தி இவ்வாறு செய்கின்றது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இறைவனைக் காட்டாது இறைவன்பால் முழு ஈடுபாட்டினையும் செலுத்த இயலாது உலக நடவடிக்கைகளின் மீது ஈடுபாடு கொண்டு உலகமுகமாக உயிர்களைச் செலுத்தும் ஆதிசத்திக்கு வடமொழியில் திரோதாயி அல்லது திரோதான சத்தி எனப்பெயர் என்று குறிப்பிடுவர். பெருமானின் இத்திருவருள் நிலையை மறைப்பாற்றல் என்று மெய்கண்ட நூல்கள் தமிழில் குறிப்பிடுகின்றன. இறைவனை மறைத்து உலகினைக் காட்டுவதால் இதனை மறைப்பாற்றல் அல்லது மறைப்புச் சத்தி என்பர். உயிர்களைப் பற்றியுள்ள அறியாமையைப் போக்குவதற்கே இம்மறைப்பும் செய்யப்படுகின்றது என்பதனால் இதனைப் பெருமானின் மறக்கருணை என்பர். நோய் கண்டவரின் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் மருத்துவர் நோயாளியின் உடலை அவர் துன்புறும் வகையில் அறுத்து அவருக்கு நன்மை செய்வது போன்றது இது என்று ஒப்புமை கூறுவர்.
உயிருக்கு அறியாமையைச் செய்யும் அழுக்கிற்கு ஆணவ மலம் என்று பெயர். இந்த ஆணவ மலத்தினைப் போக்கவே வினைகள் என்ற நற்செயல்களையும் தீயசெயல்களையும் பிறவி தோறும் உயிர்கள் செய்து இனி செயல்கள் செய்வதில் நாட்டமில்லா செவ்வியை அடைய வேண்டி உயிர்களின் உள்நின்று இறைவன் வழிநடத்துகின்றான். மறைப்பாற்றலாய் இறைவனின் திருவருள் நின்று      நம்மைத் தொழில்படுத்தவே உயிர்களுக்கு உலகமுகமான நடவடிக்கைகளின் மீது சோர்வு ஏற்படத்தொடங்குகின்றது. உலகமுகமான செயல்களில் நாட்டம் குறையத் தொடங்கி எல்லாச் செயல்களும் ஒன்றாகவே தோன்றுகின்றன. எல்லாச் செயல்களையும் விருப்பு வெறுப்பு இன்றிச் செய்தலினால் இந்நிலையை இருவினை ஒப்பு என்று குறிப்பிடுவர். உயிர்களைச் சுற்றி நடக்கும் செயல்களின் மீது விருப்பு வெறுப்பு என்பது இல்லாமையால் உயிரைப் பற்றியிருக்கின்ற வினை என்பது  அதனை விட்டு நீங்குவதற்குப் பக்குவம் அல்லது செவ்வி அடைந்து விட்டமையால் அதனை உயிருக்கு மலபரிபாகம் ஏற்பட்ட நிலை என்கின்றனர்.
உயிரின் வினைகள் நீங்குவதற்குத் தயாரான இந்நிலையில் இதுவரை மறைக்கும் ஆற்றலாய் இருந்து செயல்பட்டு வந்த இறைவனின் திருவருள் வனப்பாற்றல் எனும் அருட்சத்தியாய் மாறி நின்று அருள்புரியத் தொடங்கும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. சீர்மிகு செந்தமிழ்ச்    சைவர்களின் தலையாய மந்திரமான திருவைந்தெழுத்து மந்திரத்தில், ‘என்ற எழுத்து நடப்பாற்றல் என்ற மறைப்பாற்றலையும், ‘என்ற எழுத்து வனப்பாற்றலையும் உணர்த்தி நிற்பன என்பது இங்கு உணர்தற்பாலது.
நடப்பாற்றல் உயிர்களுக்குத் தொழிற்பட ஆரம்பித்தவுடன் மறைப்பாற்றலில் உயிரை உலகமுகமாகச் செலுத்திய இறைவனின் திருவருள் இனி உயிரை இறைவன் முகமாகச் செலுத்தி உலக நாட்டத்தினை மறைக்கும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பெருமானின் திருவருட்சத்தி அல்லது வனப்பாற்றல் உயிரில் பதிய ஆரம்பித்தவுடன் உயிரின் அறிவில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு உயிர் இறைவனை அறிவில் எழும் கதிரவனாய்க் காணத்துவங்கும் என்பர். இதனையே உயிரின் மீது விழும் அருள் வீழ்ச்சி அல்லது சத்திநிபாதம் என்பர். இறைவனின் அருள்வீழ்ச்சி முற்றப்பெற்ற உயிர்கள் இறைவன் வெளிபட்டுத் தோன்றுவதை காணத் துடிக்கும் என்பதனால் இறைவனே சிவகுருவாக வெளிபட்டுத் தன் திருத்தாளினை நல்கி உயிரின் கருவிக் கரணங்களை எல்லாம் சிவக் கருவிக் கரணங்களாய் மாற்றித் தன்னை முழுமையாகக் காணும் நிலையினை உயிருக்கு அளித்துத் தன் திருவடி நீழலில் இருத்தி மகிழ்வான் என்று மெய்கண்டநூல்கள் குறிப்பிடுகின்றன. இதனையே முத்தி அல்லது பேரின்பப் பெருவாழ்வு என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறு எப்போதும் உயிரில் பிரிப்பின்றிக் கலந்து  நின்று அருளுவதனால் பெருமானை உயிரானாய் என்றார் மணிவாசகர். எனினும் உயிர் ஒரு போதும் இறைவன் ஆகாது என்பதே சித்தாந்த சைவம் குறிப்பிட்டும் உண்மை. இறைவன் உயிர்கள் பொருட்டு இடையறாது செய்து வரும் அருட்செயலை எண்ணி அவன் திருவடிகளை விரைந்து வணங்குவோமாக!
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!


ஞாயிறு, 5 ஜூலை, 2020

38. தணியாய் போற்றி/Thaniyaai Poodri

38.          தணியாய் போற்றி

பரம்பொருளான பெருமான் கற்பனைக்கு அப்பாற்பட்ட பெரியோன். கோடான கோடி அண்டங்களைத் தன்னுள்ளே அடக்கும் அளப்பு அரியவன். அணுவுக்குள் அணுவாய் இருந்து அவற்றை இயக்கியும் அண்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு அவற்றையெல்லாம் கடந்தும் இருக்கின்ற சிவம் என்னும் பேராற்றல் மிக்கப் பரம்பொருள் மறக்கருணை புரிகின்ற வெய்யோனாகவும் அறக்கருணை புரிகின்ற தண்ணியனாகவும் இருக்கின்றான் என்று ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் திருவாசகத்தின் சிவபுராணத்தில் மணிவாசகர்  குறிப்பிடுகின்றார்.
                சிவம் என்னும் பரம்பொருளை அடைவதே நிலைபெற்ற வாழ்வு என்பதனை மறந்து, நீண்டநாள் வாழ வேண்டும் என்ற அறியாமை உணர்வால் மயக்குற்றுத் திருமாலைத் தலைமையாகக் கொண்டு, பிறவிக்கு உவமையாகச் சொல்லப்படும் திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களும் அசுரர்களும் அமிழ்தம் பெற முயன்றனர். அப்போது அவர்கள் செய்த பிழையானது பெரும் நஞ்சாகத் திரிந்து திருப்பாற்கடலில் வெளிப்பட்டது. அந்நஞ்சின் வெப்பம் தாங்காது திருமால் உள்ளிட்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி, ஓடிப்போய் பெருமானிடம் முறையிட்டுத் தங்களைக் காக்குமாறு வேண்டினர்.
பிழைபொறுக்கும் தண்ணியனாகிய சிவன் அவர்களின் பிழையைப் பொறுத்து அக்கொடிய நஞ்சினை உண்டு தம் கண்டத்து அடக்கினான். பெருமானின் திருவடியை அடைவதே நிலைத்தப் பேரின்பம் என்பதனை உணராத பிழையினை உடைய தேவர்களை உடனே மன்னித்து அவர்கள் அமிழ்தம் பெற அருள்புரிந்தான் பரம்பொருள் என்று பரம்பொருளின் தண்மையைச் சுட்டுவர். பெருமான் பிழைபொறுக்கும் பெரியோனாகத் தந்நிகரில்லாத் தண்மையனாக மேன்மையுற்று அடியார்களுக்கு அருளியுள்ளமையைப் பல அடியார்கள் வாழ்வில் காணலாம். பெருமான் அடியவர்கள் செய்யும் பிழைகளையெல்லாம் பொறுத்து அருள்பவன் எனும் துணிவினால் தான் பிழை செய்ததாகச் சுந்தரர் பெருமான் குறிப்பிடுகின்றார். திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை விட்டுப் பிரியமாட்டேன் என்று இறைவன் திருமுன்பு பொய் உறுதி செய்கின்றார். பின்பு திருவாரூர் பெருமான் மீது கொண்ட அன்பால் அவ்வுறுதியை மீறுகிறார். அதனால் பெருமான் சுந்தரரின் கண்ணொளியைப் பறிக்கின்றார். பெருமான் பிழைபொறுக்கும் பெரியோன் என்பதனாலே தாம் கொடுத்த உறுதியை மீறும் பிழையைச் செய்ததாகத் திருவெண்பாக்கம் திருக்கோயிலில் நைந்து பாடி நலம் பெறுகின்றார்.
திருவாரூரில் பெருமானின் தண்மைய மேன்மையைத் தம்பிரான் தோழர் என்ற சிறப்பினைப் பெற்ற சுந்தரர் பெருமான், “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப், போகமும் திருவும் புணர்ப்பானைப், பின்னை என்பிழையைப் பொறுப்பானைப் பிழையெலாந் தவிரப் பணிப்பானை, ஸஸ. எளிவந்த பிரானைஎன்று குறிப்பிடுவார். அதாவது எனக்குப் பொன்னையும், மெய்யுணர்வையும் வழங்குபவனும், அவை வாயிலாக உலக இன்பத்தையும், வீடுபேறு என்கின்ற பேரின்பத்தை அளிப்பவனுமாகச் சிவபெருமான் உள்ளான். அப்பெருமான் அளித்த உலக இன்பங்களை நுகரும் பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுக்கும் தண்மையனாகவும் அவன் உள்ளான். அதன் பின் பிழைகளே செய்யாமல் அவன்தான் அருள் செய்கின்றான். உயிர்களுக்கு மிக எளிதாக, எளிமையாக வந்து அருளும் பெருமான் அவன் என்றும் சுந்தரர் அடிகள் குறிப்பிடுவதனையே வாதவூர் அடிகள் எனப்படும் மணிவாசகரும் குறிப்பிடுகின்றார்.
பெருமானின் தண்மையையும் அருளும் மேன்மையையும் உணர்ந்த பட்டினத்து அடிகள், “கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச் சொல்லாப்பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனேஎன்று நெக்கு உருகிப் பாடுவார்.
                பரம்பொருளான பெருமானின் தண்மையன் ஆகியப் பெருந்தன்மையை வெறுப்பனவே செய்யும் என்சிறுமையை நின், பெருமையினால் பொறுப்பவனே ஸ.. நின் திருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமேஎன்று திருவாசக அடைக்கலப் பத்தில் மணிவாசகப் பெருமான் குறிப்பிடுவார். அதாவது தீமையான பிழைகளையே செய்கின்ற என் இழிவை, உன் பிழைபொறுக்கும் பெருங்குணத்தால் பொறுப்பவனே, உன் திருவருள் என்னும் வாளால் என் பிறவியை வேரோடு அறுப்பவனே! அடியேன் உன் அடைக்கலம் என்று குறிப்பிடுகின்றார்.
                செந்தமிழ்ச் சிவநெறியில் திளைத்து அதனைத் தங்கள் வாழ்வு முறைமையாகக் கொண்டு, அதன் வழியே பரம்பொருளான பெருமானின் திருவடியை அடைந்த அடியார் பெருமக்கள் பெருமானின் மேன்மையை, பிழைபொறுக்கும் பெருந்தன்மையை தண்மையன் ஆகியத் தன்மையை நன்கு அறிந்திருக்கின்றனர். திருநெறியாகிய சைவநெறியினை அறியாத போலிச் சைவர்கள் பலர் இன்று சிவபெருமானை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் துன்பம் ஏற்படும் என்று கூறுவது அறியாமையின் வெளிப்பாடு என்பதனைத் தெளிதல் வேண்டும்.
சிவபெருமானை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் சண்டையும் குழப்பமும் ஏற்பட்டுக் குடும்பம் ஆட்டம் கண்டு விடும் என்பது அறியாமையிலும் அறியாமை. கருணையே வடிவான பிழைபொறுக்கும் பெரியோனை, தந்நிகர் இல்லாத் தண்மையனைப்  பழிவாங்கும் கடவுள், கடுஞ் சினமுடைய கடவுள், உயிரைப் பறிப்பதை மட்டும் தொழிலாகக் கொண்ட கடவுள், சுடுகாட்டில் கொடூரமாக ஆடிக்கொண்டிருக்கும் கடவுள், கொலை வெறி பிடித்தக் கடவுள் என்று தமிழ்ச் சைவர்களிடையே அவர்கள் முழுமுதலாகக் கொண்டு வழிபட வேண்டிய கடவுளைப் பற்றி அச்ச உணர்வை ஏற்படுத்தி உண்மையை உணரவிடாது சமய ஆசிரியர்கள் என்ற போர்வையில் உலவுகின்றவர்களை நம்புவதும், அவர்களைப் பின்பற்றுவதும், அவர்களைக் கொண்டு நம் இல்ல நிகழ்ச்சிகளிலும் திருக்கோயில்களிலும் வழிபாடுகளைச் செய்வதும் சைவத்துக்கு நாம் இழைக்கும் பெரும் தீங்காகும் என்பதனைத் தெளிதல் வேண்டும். மணிவாசகரின் திருவாசகம் பற்றி வாழ்வோம்.  
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!