வியாழன், 7 ஜூலை, 2016

16. நேயத்தே நின்ற நிமலன்/ Neyatthe Nindra Nimalan

16.  நேயத்தே நின்ற நிமலன்

            “நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றிஎனும் வரி மணிவாசகர் அருளிய திருவாசகத்தின் சிவபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. அடியாரது அன்பினில் நிலைத்து நின்ற மாசு அற்றவனின் திருவடிக்கு வணக்கம் என்று மணிவாசகர் இதன் வழி குறிப்பிடுகின்றார். பெருமான் அடியார்களின் அன்பிற்கே அகப்படுவான் என்பதனை, “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஎன்று வள்ளல் சிதம்பர இராமலிங்க அடிகள் குறிப்பிடுவார். அப்படி அன்பிற்கு அகப்படும் மலையாகிய பெருமான் அகப்பட்டு விட்டால் எளிதில் நீங்க மாட்டான் என்பதனை, “இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன், எங்குஎழுந்து அருளுவது இனியேஎன்பார் மணிவாசகர். பெருமான் வேறு எதற்கும் ஈர்க்கப்படாது அன்பிற்கே அடிமையாகும் தன்மையாவது அவன் மாசு அல்லது மலம் அற்று இருப்பதனால் ஆகும் என்று குறிப்பிடுகின்றார் மணிவாசகர்.

            பெருமானை எண்குணத்தான் என்பார் உலகப் பேராசான் திருவள்ளுவர். அவ்வெண் குணம் அல்லது இயல்புகளில் ஒன்று இயல்பாக மும்மலம் நீங்கினவன் என்பதாகும். ஆணவம், கன்மம், மாயை என்பனவே மும்மலங்கள் எனப்படுகின்றன. இம்மும்மலங்களைத் தளை என்றும் குறிப்பிடுவர். வடமொழியில் பாசம் என்பர். அறிவு, விருப்பு, செயல்களை இயல்பாக நிகழ விடாமல் தடைசெய்து, தளைத்து அல்லது கட்டி வைப்பதனால் மும்மலங்களைத் தளை என்றும் குறிப்பிடுகின்றனர்.

            கண்ணின் ஒளியை மறைக்கும் புற இருள் போல, அறிவை மறைக்கும் அக இருள்தான் ஆணவ மலம். புறத்திலே நாம் காணும் இருள் ஆனது ஒரு பொருளையும் காட்டாது மறைக்கும். ஆயினும் இருளானது இருண்ட கரு நிறமாகிய தன் இயல்பினையாவது காட்டும். ஆனால் ஆணவமாகிய அக இருள், புறப் பொருளை மட்டும் அல்லாது தான் இருப்பதையும் காட்டாது என்று தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இருள் கண்ணொளியை மறைக்கும். ஆனால் அதனால் கதிரவனின் ஒளியை மறைக்க இயலாது. அது போல ஆணவ மலம் உயிர் அறிவை மறைக்க இயலுமே அன்றி இறையுணர்வை அல்லது இறையறிவை மறைக்க இயலாது. எனவேதான் இறைவன் ஆணவ மலத்திலிருந்து இயல்பாய் நீங்கினவன் என்பதனை நின்மலன் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

            உயிர்களுக்குத் தன் அறிவை மறைத்துக் கீழ்நோக்கிச் செலுத்தும் ஆணவ மலத்தின் தாக்கம் இருப்பதனால்தான் உயிர்கள் அறியாமை எனும் பலவீனத்தால் பல்வேறு குற்றங்களுக்கு உள்ளாகின்றன. இதனாலேயே உயிர்கள் எதிலும் எவ்விடத்திலும்யான்’,’எனதுஎனும் செருக்குடனும்தான்எனும் முனைப்புடனும் நிற்கின்றன. இவ்வியல்புகள் இறைவனை இயல்பாகவே பற்றுவது கிடையாது என்கின்றார் மணிவாசகர்.

            எல்லாவற்றிலும் தானே சிறப்பு உடையவன், தன்னுடையதே சிறப்புடையது என்று உயிர்கள் காட்டும் முனைப்பினை இறைவன் காட்டுவதில்லை என்கின்றார் மணிவாசகர். உயிர்கள் விரும்பும் புகழுக்கும் பேருக்கும் இறைவன் மயங்குவதில்லை! இறைவன் தன் பேர் ஆற்றலையும் பேர் அறிவையும் உயிர்களிடத்தே காட்டி அடைய வேண்டியது ஒன்றும் இல்லை என்கின்றார். உயிர்களுக்குப் பிறரால் ஆக வேண்டிய செயல்கள் இருப்பது போல இறைவனுக்கு உயிர்களால் ஆக வேண்டிய செயல்கள் எதுவும் இல்லை என்கின்றார். உயிர்களைப் போன்று அறியாமையால் இறைவன் தவறுகள் செய்வதில்லை. பின் வருந்துவதும் இல்லை. உயிர்களைப் பழி வாங்குவதும் இல்லை. உயிர்களைப் பழிவாங்குவதால் பெருமானுக்குக் கிட்டுவதும் ஒன்றும் இல்லை. உயிர்களைத் துன்புறுத்திப் பெருமான் மகிழ்வதும் இல்லை. பெருமான் உயிர்களைப் போன்று சூழலுக்கு ஏற்பப் போலியாக நடிப்பது இல்லாமல் என்றும் ஒரு படித்தாகவே இருப்பவன் என்கின்றார். மேலும் நிலைத்த இன்பமுடைய பொருளான அவன் நிலையற்றப் பொருள்களையும் உயிர்கள் கொடுக்கும் நிலையில்லாத இன்பம் உடைய பொருள்களையும் விரும்புவதில்லை என்றும் மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

            கடவுளைப் போன்றே உயிர்களும் தளையாகிய மலங்களும் என்றும் உள்ள பொருள் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. ஆயினும் உயிரைத் தளை பற்றுவதுபோல் கடவுளைத் தளை பற்றுவதில்லை என்கின்றார் மணிவாசகர். பெருமானைத் தளை பற்ற இயலாது என்பதனை, “பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில், பதியினைப் போல்பசு பாசம் அனாதி, பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம், பதி அணுகில் பசு பாசம் நிலாவேஎன்று தமிழ் ஆகமம் அருளிய திருமூலர் குறிப்பிடுவார். பதியாகிய இறையும் பசுவாகிய உயிரும் பாசமாகிய தளையும் அப்பதியினைப் போல் என்றும் உள்ளவை. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் கட்டுண்ட உயிரும் சடப்பொருளான, அறியாமையைச் செய்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் இறைவனை அணுக முடிவதில்லை! கடவுளின் திருவருளைத் துணையாகக் கொண்டு உயிர் கடவுளை அணுகுமாயின் உயிரைப் பற்றியுள்ள மும்மலங்கள் தம் முனைப்பு இல்லாமல் கெட்டு ஒடுங்கும் என்பதனைத் திருமூலரும் தெளிவுபடுத்துகின்றார்.

            மும்மலங்களில் இரண்டாவது மலமாகிய கன்மம் அல்லது செயல் அல்லது வினை என்பதும் கடவுளைப் பற்றுவது கிடையாது என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். ஆணவம் எனும் மலத்தினைப் போக்குவதற்குக் கன்ம மலமும் மாயாமலமும் இறைவனால் சேர்த்து வைக்கப்பட்டவை என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்களுக்குப் பிறவிகள், உடல்நிலை, வாழும் உலகம், அறிவு நிலை, நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளுக்குக் கரணியம் வினைப் பயனே என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்கள் என்னதான் முயன்றாலும் அது நிறைவேறும் காலம் வரும் வரையிலும் அம்முயற்சி நிறைவு பெறாமல் நிற்பதற்குக் கரணியம் வினைப் பயனே என்று சைவம் குறிப்பிடுகின்றது. “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்என்பதும் வினைக் கொள்கையின் அடிப்படையில்தான்.

            அறியாமையால் மனம், வாக்கு, காயத்தால் பெருமான் தாக்குறுவதில்லை என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். இதனால் பெருமானிடத்தில் தீய எண்ணங்கள் அண்டுவதில்லை. தீய மொழிகள் பெருமானின் திருவாயிலிருந்து உதிப்பதில்லை. பெருமானின் திருவருட் செயல்கள் எல்லாமே அருட் செயல்களே. உயிர்களின் வினைகளுக்கு ஏற்பவே அவை நல்லனவாகவும் தீயனவாகவும் நுகர்ச்சிக்கு வருகின்றன. பெருமான் உயிர்களைப் போன்று ஐம்புலன்களால் தாக்குறுவது இல்லை என்கின்றார் மணிவாசகர். இதனையே, “பொறிவாயில் ஐந்துஅவித்தான்என்று இறைவனை வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவார். ஐம்பொறிகளின் வாயிலாக ஏற்படும் வேட்கைகளையும் அவற்றினால் ஏற்படும் தவறுகளையும் வென்றவன் இறைவன் என்கின்றார். நல்வினையும் தீவினையும் நீங்கினால் மட்டுமே உயிர்களுக்குப் பிறவியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது சைவக் கொள்கை. ஒன்று பொன் விலங்கு மற்றது இரும்பு விலங்கு. இரண்டுமே உயிர் பிறவியில் இருந்து விடுபடுவதற்குத் தடையானவைதான். எனவேதான் அவற்றைஇருள்என்று திருவள்ளுவர் உருவகித்தார். இறைவன் இயல்பாய் வினைகளை நீங்கினவன் என்பதனை, “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்என்றார்.

            ‘மாஎன்றால் ஒடுங்குதல் என்றும்யாஎன்றால் தோன்றுதல் என்றும் பொருள்படும் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும். எனவே எல்லாப் பொருள்களும் ஒடுங்குதற்கும் தோன்றுதற்கும் எது மூலப் பொருளாக இருக்கின்றதோ அதுவே மாயை எனப்படுகின்றது. புல், பூடு, புழு, மரம், விலங்கு, பாம்பு, கல், மாந்தர், பேய், கணங்கள், அசுரர், வானவர், முனிவர், போன்ற உயிர்களுக்கு உரிய உடல், கருவி, நுகர்ச்சிப் பொருள்கள் யாவும் இம்மாயை என்னும் மூலப் பொருளில் இருந்தே ஆக்கப்படுகின்றன என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இவ்வுடம்புகள் பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, பசி எனபனவற்றிற்கு உட்பட்டு அல்லல்படும், துன்புறும், சிறுக்கும், பெருக்கும், அழிந்துபடும். நீர், நிலம், தீ, வளி, வெளி எனும் ஐவகைப் பூதங்களுக்குத் தாக்குற்றுத் தமது நிலையில் இருந்து சீர் கெடும், மாறும், அழியும். உயிர்களின் உடம்பிற்கு இளமைக் கால உடல், முதுமைக் கால உடல் என்ற மாற்றமும் தோற்றமும் உண்டு. இறப்பு ஏற்பட்டு உடல் அழிவது உண்டு. கடவுளின் திருமேனி மாயையால் ஆகியது அல்ல என்கின்றார் மணிவாசகர். அது இறைவனின் திருவருளால் ஆனது. இறைவன் தனது திருவருளையே தமக்குத் திருமேனியை அமைத்துக் கொள்ளவதற்குத் துணையாகக் கொள்கின்றான் என்கின்றார் மணிவாசகர். இதனாலேயே பெருமானை, “பிறவா ஆக்கைப் பெரியோன்என்றும்மூவா முதல்வா போற்றிஎன்றும் மாற்றம் ஏற்படா ஒளி, “நொந்தா ஒண் சுடரேஎன்றும் அடியார்கள் போற்றி மகிழ்ந்தார்கள்.

            மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி எனும் அகக் கருவிகளும் கை, கால், எருவாய், கருவாய் போன்ற செயற் கருவிகளும் மாயையினால் ஆக்கப்பட்டு உயிர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன. இறைவன் மாயையினால் ஆகிய கருவிகளைக் கொண்டு எதனையும் செய்வதில்லை. பெருமான் நினைத்த அளவிலேயே அனைத்தையும் நிகழ்த்துபவன் என்று மணிவாசகர் நினைவுறுத்துகின்றார். அடியார்களின் வரலாற்றில் பெருமான் வருவதெல்லாம் மாந்தர் எனும் சட்டையை அணிந்து வருதல் போல் ஆகும் என்று சைவம் குறிப்பிடும். எனவே அறிகருவிகள், செயல் கருவிகள் என்று மாயையால் ஆகியவற்றிலிருந்து பெருமான் நீங்கினவன் என்று மணிவாசகர் தெளிவுபடுத்துகின்றார்.

            நீர், நிலம், தீ, வளி, வெளி, கோள்கள், விண்மீன்கள், திசைகள் இவை யாவும் மாயையினால் ஆக்கப் பெற்று இருப்பதனால் இவை பெருமானைப் பாதிப்பதில்லை. மாற்றம் அடையக் கூடிய மாயையினால் ஆகிய பொருட்களை நிலையானவை என்று எண்ணுகின்ற மயக்கத்தினை மாயா மலம் என்பர். இம்மாயா மலம் உண்மை அல்லாதவற்றை, நிலையில்லாதவற்றை உண்மைப் பொருள் போன்றும் நிலைத்த பொருள் போன்றும் மயக்கினை ஏற்படுத்தும். இம்மயக்கமும் பெருமானுக்கு ஏற்படுவதில்லை என்கின்றார் மணிவாசகர். நின்மலன் ஆகிய அப்பெருமானின் உண்மை இயல்பினை அறிவோம் தெளிவான சைவநெறியினைப் பின்பற்றுவோம்!


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

சனி, 18 ஜூன், 2016

15. சிவன் சேவடி போற்றி / Sivan Sevadi Podtri

சிவன் சேவடி போற்றி

          தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் வழிபடு முழுமுதற் பொருளான பரம்பொருளைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. மேலான அறிவுப் பொருளாகிய சிவத்திற்குப் பெயரோ, அடையாளமோ இல்லை என்றாலும் உயிர்கள் குறிப்பிடும் பொருட்டும் அறியும் பொருட்டும் அம்மேலான அறிவுப் பொருளை அதனின் இயல்பினை வைத்துக் கடவுள், சிவம் என்று எல்லாம் குறிப்பிட்டனர். தூய அறிவாக விளங்கும் பரம்பொருள் எல்லாவற்றையும் கடந்தும் அவற்றுக்கு உள்ளும் இருப்பதனால் அதனைக் கடவுள் என்றனர். சிறப்பிற்குச்சியையும் வனப்பிற்குவையும் வைத்து அதனைச் சிவம் என்றனர். சிவம் என்பது மங்கலத்தைக் குறிக்கும் என்றும் பொதுவாகக் குறிப்பிடுவர். செந்தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையை விளக்குகின்ற சிவ ஆகமங்களும் திருமுறைகளும் மெய்கண்ட நூல்களும் சிவம் என்பது சிறப்பும் வனப்பும் உடைய பொருள் என்றே விளக்குகின்றன. திருநாவுக்கரசு அடிகளைக் கல்லோடு கட்டிக் கடலில் போட்ட போது அவரைக் காப்பாற்றிய திருவைந்து எழுத்து மந்திரமான, ‘நமசிவயஎனும் மந்திரத்திலும்சிஎன்பது சிவத்தையும்என்பது வனப்பாற்றலையும் குறித்து நிற்கின்றது என்று குறிப்பிடுவர்.

                சிவன் எனும் சொல்லுக்குப் பொருள் சிறப்பும் வனப்பும் உடையவன் என்று சித்தாந்த சைவம் குறிப்பிட, அறியாமையில் உழலும் பலர் திரித்து விட்டச் செய்தியினால் சிவன் என்ற சொல்லைக் கேட்கவும் பலர் அஞ்சுகின்றனர். சிவன் என்று சொன்னால் துன்பம் வந்து சேரும். சிவனை வழிபட்டால் வாழ்க்கையில் இடர்கள் தொடர்ந்து வரும் என்று அறியாமையில் பிதற்றுகின்றனர். தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் நெறியாகிய சித்தாந்த சைவத்தோடு சற்றும் தொடர்பில்லாத சமய குருமார்கள், சிவன் சுடுகாட்டில் ஆடுபவன், உயிர்களைக் கொன்று குவிப்பவன், ஈவு இரக்கம் அற்றவன், சிவனை வழிபட்டால் குடும்பச் சிக்கல் ஏற்படும், வீட்டில் செல்வம் தங்காது என்று அள்ளி விடுகின்றனர். சைவ நெறி வழிபாட்டு முறைகளைச் சற்றும் கற்காத, சைவ முறைப்படித் தீக்கை பெறாத சமய ஆசான்கள் சிலர் சிவனை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் இறப்பு ஏற்படும் என்று கூறித் தங்கள் அறியாமையை வெளிப்படுத்துகின்றனர். இவற்றிற்கு எல்லாம் சாட்டை அடி கொடுப்பது போல, ‘சிவன் சேவடி போற்றிஎனும் மாணிக்க வாசகரின் சிவபுராண வரி அமைந்திருக்கின்றது.

                தொல்காப்பியர் காலத்துக்கு முன்பாகவும் சங்க இலக்கிய காலத்திலும் சிந்து வெளிநாகரிக காலத்திலும் காப்பிய காலத்திலும் அதற்குப் பின்னும் நெடுகத் தமிழ்ச் சைவர்கள் சிவனை வழிபட்டு வந்துள்ள சான்றுகள் நமக்குக் கிட்டுகின்றன. தொல்காப்பியத்தில் ஆல்அமர் செல்வன் என்று சிவபெருமான் குறிக்கப் பெறுகின்றான். புறநானூற்றில் சிவபெருமான் திரிபுரம் எரித்தவன், கறைமிடற்று அண்ணல், மூன்றாவது கண்ணை நெற்றியில் உடையவன், பிறை அணிந்தவன் என்று கிடைக்கப் பெறுகின்றது. சங்கப் பாடல்களின் வழி சிவபெருமானை ஆல்அமர் செல்வனாகத் தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வந்துள்ளதையும் பழந்தமிழர் சிவன் கோயில்களைக் கட்டிய முறைகளையும் சிவ வழிபாட்டு முறைகளையும் அறிய முடிகின்றது என்று பேராசிரியர் ..ஞானசம்பந்தன் குறிப்பிடுகின்றார். சிலப்பதிகார காலத்திலும் சிவனை அச்சமின்றி வழிபட்டுள்ளமை தெரிகின்றது.

                “பிறவா யாக்கை பெரியோன் கோயில்என்று சிவபெருமானையே இளங்கோவடிகள் குறிப்பிடுவதாக ஆய்வு அறிஞர்கள் குறிப்பிடுவர். தவிர, மதுரைக் காண்டத்தில், வேட்டுவ வரியில் சிவனையும் உமையையும், “மதியின் வெண்தோடு சூடும் சென்னி, நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்து .... நஞ்சுண்டு கறுத்தகண்டி வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் .... வளையுடைக் கையில் சூலம் ஏந்தி, கரியின் உரிவை போர்த்துஎன்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இன்னும்திங்கள் வாழ் சடையான்”, “ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துஎன்றெல்லாம் சிலப்பதிகாரத்தில் காணக்கிடக்கின்றது. இதனால் சிவவழிபாடு தமிழ்ச் சைவர்களால் அன்போடு போற்றப் பெற்ற ஒரு வழிபாடு என்று அறிய முடிகின்றது.

                குழந்தைக்குப் பசி எடுக்கும் வேளை அறிந்து தவறாமல் பால் ஊட்டும் தாயின் அன்பினைக் காட்டிலும் மேலான அன்பு உடையவன் சிவன் என்று போற்றுவது தமிழ்ச் சைவர்களின் வழக்கு. “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்என்று குறிப்பிடுவார் திருமூலர். “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆர்அமுதேஎன்பார் மணிவாசகர். “அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ அன்புடைய மாமனும் மாமியும்நீ, ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீஎன்பார் திருநாவுக்கரசு அடிகள். “சித்தத்துள் தித்திக்கும் தேனே, ஆனந்தக் கனியேஎனபார் திருமாளிகைத் தேவர். “ கரையிலா கருணை மாகடலைஎன்பார் சேந்தனார். “தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம், அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்என்பார் வள்ளல் பிரான். இவ்வாறு அன்பின் நிலைக்களமாக, அன்பின் ஊற்றாக, அன்பின் வடிவாக வைத்துப் போற்றிய சிவனை, சிவவழிபாட்டை, ‘ருத்ர’, ‘ருத்ர வழிபாடுதமிழரிடையே புகுத்தப் பட்டவுடன் மறந்தனர் நம் தமிழ்ச் சைவர்.

                வடமொழி வேதங்களிலே மிகுந்த சினமுடைய கடவுளாக, மூர்க்க இயல்புடைய கடவுளாக, எல்லோரையும் அழிக்கும் கடவுளாகச் சொல்லப் பெற்ற ருத்ரன் தமிழர்களால் வழிபடப்பெற்ற அன்பே வடிவான சிவனோடு தொடர்பு படுத்தப்பட்டான். தமிழர் மரபையும் தமிழர் பண்பாட்டையும் தமிழர் வழிபாட்டு முறையையும் அறியாத, வடமொழி வேதங்களைக் கற்றப் பூசகர்கள் ருத்ரனையும் தமிழர்களின் சிவனையும் ஒன்று என்றனர். வடமொழி வேதத்தில் உள்ள ருத்ர வழிபாட்டு முறைகளைத் தமிழ்ச் சைவர்களின் திருக்கோயில்களில் திணித்தனர். முழுமுதற் பொருளாக வழிபடப்பட்டு வந்த சிவனைத் துணை தெய்வங்களில் ஒன்றாக ஆக்கினர். தமிழ் போற்றிகளும் திருமுறைகளும் தமிழர் திருவுருவ வழிபாட்டு முறைகளும் பின் தள்ளப்பட்டன. தமிழ் கேட்டு மகிழ்ந்த சிவனுக்கு வடமொழியில் மந்திரங்கள் சொல்லப் பட்டன. வடமொழி மந்திரங்கள் தெரியாத தமிழ்ச் சைவர்கள், தமிழர் சைவத் திருக்கோயில்களில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களோடு தமிழ் மந்திரங்களும் நீங்கிச் சைவத் திருக்கோயில்களில் திருமுறைகள் ஓதுதற்கு வடமொழிப் பூசகர்களின் அனுமதி வேண்டுவதாயிற்று. பெரும் போராட்டத்திற்குப் பிறகு சிவன் திருக்கோயில்களில் பஞ்சபுராணம் எனும் ஐந்து தமிழ்ப்பாடல்கள் மட்டும் ஓதுதற்கு ஏற்றுக் கொள்ளப் பட்டது.

                தமிழ்ச் சைவர்களின் பரம்பொருளாக, முழுமுதற் பொருளாக, ஒவ்வொரு தமிழ்ச் சைவர்களின் இல்லங்களிலும் சைவத் திருக்கோயில்களிலும் இருந்த சிவன் இன்று அறுசமயக் கொள்கையின் ஒரு தெய்வமாகக் காட்டப் பெறுகின்றான். தமிழ்ச் சைவர்கள் சிவனைப் பரம்பொருளாகக் கருவறையில் வைத்துப் போற்றி வழிபட்டமையைத் தமிழகத்துப் பழங்காலச் சிவன் கோயில்கள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன. தமிழ்ச் சைவர்கள், திருமுறைகள் பாடப்பெற்றதும் அருள் நிகழ்ச்சிகள் நிகழப் பெற்றதும் நாயன்மார்கள் திருவடி அடையப் பெற்றதுமான அச்சிவன் கோயில்களைப் புறந்தள்ளி விட்டுப் புதுப்புது குட்டிக் கோயில்களைக் கட்டிப் புதுப்புது வழிபாடுகளைக் கொண்டு வந்ததின் விளைவாக சிவ வழிபாடு இன்று மீட்டு எடுக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. தமிழ்ச் சைவர்களுக்கே சிவ வழிபாட்டை அறிமுகப்படுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டு உள்ளது. சிவ ஆகமங்களை முறையாகக் கற்றவர்களும் திருமுறைகளைக் கற்றவர்களூம் சைவ மெய்கண்ட நூல்களைக் கற்றவர்களும் முறையாகச் சிவதீக்கைப் பெற்றவர்களும் சிவன் திருக்கோயில்களில் பூசனை இயற்றுவது அருகி வருகின்றது.

                தமிழ்ச் சைவர்கள் திருமுறைகளைக் கருத்துடன் கற்காததினாலும் சைவ மெய்கண்ட நூல்களைப் பயிலாததினாலும் முறையான சிவ வழிபாட்டினையும் சிவபெருமானின் அருமையையும் அறியாது தடுமாறுகின்றனர். பொன்னும் மெய்ப்பொருளும் போகமும் திருவும் தருகின்ற பெருமானை இறந்தவருக்கு மோட்சம் அல்லது வீடு பேறு மட்டும் அளிக்கின்ற கடவுள் என்று எண்ணி, அச்சிவனை மோட்ச விளக்கு ஏற்றுவதற்கு உரிய கடவுள் என்றாக்கி விட்டிருக்கின்றனர். “நமசிவாயவே ஞானமும் கல்வியும் நமசிவாயவே நானறி விச்சையும்என்பார் திருநாவுக்கரசு அடிகள். சிவபெருமானைஞானத்திறள்என்பார் திருஞானசம்பந்தர். ‘பேரறிவான பெருஞ்சுடர் ஒன்று அதுஎன்பார் திருமூலர். இத்தகைய அறிவின் வடிவாய் விளங்கும் சிவனைக் கல்விக்கு உரிய கடவுளாய்த் தமிழ்ச் சைவர்கள் எண்ணாதது அறியாமையே!

                “தனதன் நற்றோழா சங்கரா சூல பாணியேஎன்று திருவிசைப்பாவில் திருமாளிகைத் தேவர் குறிப்பிடுவார். தனதன் என்பவன் குபேரன். அக்குபேரனுக்குச் செல்வத்தை வழங்கியவன் சிவன் என்பார் திருமாளிகைத் தேவர். தமிழ்ச் சைவர்கள் செல்வம் வேண்டுமானால் சிவனே அதனை அளிக்க வல்லவன் என்று எண்ண இயலாதது எவ்வளவு பெரிய அறியாமை! சிவ வழிபாட்டினை அறியாத சிலர் இன்றுசிரிக்கும் புத்தர்என்ற சீனரின் வடிவ பொம்மையைக் குபேரன் என்று ஆக்கி அதற்குக் குபேர வழிபாட்டினையும் செய்கின்றனர். இத்தவற்றினைச் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டிய குருமார்களே அவ்வாறு செய்யச் சொல்லித் தூண்டுவதும் அதற்குத் துணைபோவதும் வேலியே பயிரை மேய்ந்தாற் போல் உள்ளது.



                கல்விக்கு ஒரு கடவுள், வீரத்திற்கு ஒரு கடவுள், செல்வத்திற்கு ஒரு கடவுள், திருமணத்திற்கு ஒரு கடவுள், பேய் அச்சத்திற்கு ஒரு கடவுள், காய்ச்சலுக்கு ஒரு கடவுள், பாதுகாப்பிற்கு ஒரு கடவுள் என்று இல்லாமல் எல்லாவற்றையும் நமக்கு அளிக்க வல்லவன் சிவபெருமான் என்று தமிழ்ச் சைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்துவதாக மணிவாசகரின் சிவன் சேவடி போற்றி என்ற சிவபுராண வாசகம் உள்ளது. தமிழ்ச் சைவர்கள் இதனை உணர்வார்களாக! உண்மைச் சைவர்களாக வாழ்வாங்கு வாழ்வார்களாக
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!