2. திருக்கோவிலுக்குச் செல்லும் காலம்
தமிழ்ச்
சைவர்கள் திருக்கோவில்களுக்குச் செல்வதற்கு உரிய நாள் செவ்வாய் அல்லது வெள்ளி என்று
மயங்கிக் கிடக்கின்றனர். நாள்தோறும் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும்
என்றே தமிழ்ச் சைவர்களின் தீந்தமிழ் மந்திரங்களான திருமுறைகள் குறிப்பிடுகின்றன. “நிலைபெறுமாறு
எண்ணுதியேல் நெஞ்சே நீவா, நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு” என்று திருநாவுக்க்கரசு அடிகளின் திருவாய்மொழி பகர்கின்றது. “நாளும்
உலக வாழ்க்கையில் சிக்கித் தடுமாறும் நெஞ்சே, நீ தடுமாற்றம் நீங்கி நிலையாக வாழ நினைப்பாயானால், நாள்தோறும் எம்பெருமானுடைய
கோவிலுக்குச் செல்” என்று அறிவுறுத்துகிறார். இவ்வாறு நாள்தோறும் திருக்கோவில்களுக்குச் சென்று
வழிபட இயலாதவர்கள் வாரத்தில் இரண்டு நாட்களாவது திருக்கோயில்களுக்குச் சென்று
வழிபட்டு வாருங்கள் என்றார்கள். அதுவே பின்னாளில் வழிபடுவதற்கு உரிய நாள்
செவ்வாயும் வெள்ளியும் என்றாகி விட்டது.
வாரத்தில் இரண்டு நாட்கள் திருக்கோவிகளுக்குச் செல்ல இயலாதவர்கள், வாரத்தில் ஒரு நாளாவது
திருக்கோவில்களுக்குக் குடும்பத்தோடு சென்று வழிபடச் சொன்னார்கள். இது வெள்ளிக்
கிழமை திருக்கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு என்றாகி விட்டது. இவ்வாறு
வாரத்திற்கு ஒரு நாள் என்று திருக்கோவில்களுக்குச் செல்வதற்குக்கூட இயலாதவருக்குத்
திருவிழாக்காலங்கள் அல்லது ஆண்டுத் திருவிழாக் காலங்களிலாவது சென்று வருங்கள்
என்று சொல்லி வைத்தார்கள். அதுவும் இயலாதவருக்குப் பெருமானே தெருக்கள்தோறும்
இல்லங்கள்தோறும் ஊர் ஊராகத் தேடி வந்து அருள்புரிவதற்குத் தேர்த் திருவிழாக்களை நடத்தி
வழிபட வைத்தார்கள்.
ஒன்றாய் இருக்கின்ற பரம்பொருளின் பல்வேறு திருவடிவங்களை, வேறு வேறு கடவுளாக வேறுபடுத்தி
வழிபடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டப் பின், இன்ன கிழமை இன்ன கடவுளுக்கு உரிய நாள் எனும் வழக்கம் பெருகியிருக்கின்றது.
திங்கட் கிழமை சிவனுக்கும் செவ்வாய்க் கிழமை துர்க்கைக்கும் வியாழக்கிழமை வியாழன்
என்ற குருவுக்கும் காரிக்கிழமை சனச்சரன் எனும் சனீசுவரனுக்கும் என்று சிலர்
ஏற்படுத்தி விட்டிருக்கின்றனர். இதனையொட்டியே இன்று பலரும் திருக்கோயிவில்களுக்குச்
செல்லும் வழக்கமும் நாளும் மாறிக்கிடக்கின்றது.
வாரத்தில் வியாழக் கிழமை
வியாழன் என்ற குருவுக்கு விளக்கு ஏற்றுவதற்கு மட்டும் திருக்கோவில் செல்பவர்கள்
என்றாகிவிட்டது. காரிக் கிழமை சனச்சரனுக்கு மட்டும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று
காரிக் கிழமை சனச்சரன் அமைந்திருக்கும் திருக்கோவில் பகுதிக்கு மட்டும் சென்று
வருபவர்களும் உண்டு என்றாகிவிட்டது. எல்லா நாளும் எல்லா திருவடிவங்களையும்
வணங்குவதற்கு உரிய நாள் என்பதே உண்மைச் சமயம் குறிப்பிடும் செய்தியாகும். விரதம்
இருத்தல் எனும் உண்ணா நோன்பு கூட இன்ன நாளில் இன்ன கடவுளுக்கு இன்ன பலனுக்கு என்று
உலகமுகப்படுத்தப்பட்டு விட்டது. உடற்சோர்வைப் புறந்தள்ளி, சுறுசுறுப்புடன்
ஒருமுகப்படுத்தப்பட்டச் சிந்தனையுடன் அன்போடு இறைவனைத் தொடர்ந்து எண்ண வேண்டும்
என்பதே உண்ணா நோன்பின் நோக்கம், அதனை இயன்ற நாட்களில் செய்யலாம் என்பதே உண்மைச் சமயம். அதனை உலக நோக்கிற்காகச்
செய்வது சைவநெறிக்குப் புறம்பானது.
திருக்கோவில்களில் நாள் வழிபாடு
(நித்திய பூசனை), சிறப்பு வழிபாடு(நைமித்திக பூசனை) என்று இரண்டு வழிபாடுகள் நிகழ்த்தப் பெறும்.
நாள் வழிபாடு நாள்தோறும் திருக்கோவில்களில் நிகழ்த்தப் பெறும் பூசனை. சிறப்பு
வழிபாடு திருவிழாக்காலங்களில் நிகழ்த்தப் பெறும் சிறப்பு வழிபாடு. பூசனைக்
காலத்திற்குத் திருக்கோவில்களுக்குச் சென்று வழிபடுவதே சிறப்பு உடையதாகும்.
பூசனைக் காலத்தில் வழிபாட்டில் உள்ள அனைத்துக் கரணங்களும் (கிரியைகள்) முறையாக
சிவஆகம நெறிப்படி நடத்தப்பெறும். ஒவ்வொரு பூசனைக் கரணமும் ஆழ்ந்த சமய உண்மையை
உணர்த்துவதாக அமையும். பூசனையின் போது இயக்கப்படும் திருக்கோவில் மணி, பூசனை மணி, சங்கு, சேகண்டி, முழவம், நாதசுவரம், தாளம், மந்திரங்கள், திருமுறைகள் நம் உள்ளத்தில்
இறையன்பை ஊற்றெடுக்கச் செய்யும். இவை மனம் ஒன்றுவதற்குத் துணை நிற்கும்.
திருக்கோவிலுக்குப் பூசனைக்
காலத்தில் செல்வது அடியார் இணக்கத்திற்கும் திருக்கோவில் திருத்தொண்டுகள்
ஆற்றுவதற்கும் வழிவகுக்கும். நம் சமயம் வலியுறுத்துகின்ற அடியார் வணக்கம், அடியார் இணக்கம் பூசனைக் காலம்
அல்லாத வேளைகளில் கிட்டுவது கடினமே! பூசனைக் காலங்களிலும் திருவிழாக்காலங்களிலும்
சிறப்பு வழிபாட்டுக் காலங்களிலும் திருக்கோவில்களுக்குச் சென்று வழிபடும்போது
பெருமானின் திருப்பல்லக்கினைச் சுமத்தல், திருச்சின்னங்களை ஏந்துதல், கவரி வீசுதல், தீவத்தி ஏந்துதல், திருக்கோவில் மணியினை ஒலித்தல், திருமஞ்சனத்திற்குத் துணை நிற்றல், அடியார்க்கு அமுது பறிமாறுதல் போன்ற திருக்கோவில் திருத்தொண்டுகளைச் செய்யும்
வாய்ப்புக் கிட்டும். இது போன்று பூசனைக் காலங்களில் திருக்கோயில்களுக்குச் சென்று
வழிபடுவது நம் குடும்பத்தில் உள்ளவருக்கும் இளைய தலைமுறையினருக்கும் நல்ல
வழிகாட்டுதலாய் அமைவதோடு இன ஒற்றுமையும் நற்பண்புகளும் மேலோங்க நலம் பயக்கும்.
நாள் வழிபாட்டில்
திருக்கோவில்களில் ஆறுகாலப் பூசனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிகாலை, காலை, நண்பகல், சாயுங்காலம், முன்னிரவு, நள்ளிரவு என்று கதிரவனை
அடிப்படையாகக் கொண்டுத் திருக்கோவில் பூசனைக் காலங்கள் குறிப்பிடப் பெறுகின்றது.
இவ்வாறான காலப் பூசனைக்குச் சென்று வழிபடுவது சிறப்பு. இயலாத சூழலில் அவற்றைக்
குறைத்து இயன்ற வேளை என்று வைத்துக் கொள்கிறோம். திருக்கோவில்களும் இடம், சூழல் என்பனவற்றை அடிப்படையாகக்
கொண்டு எத்தனை முறை காலப்பூசனைகளை இயற்றுவது என்று அமைத்துக் கொள்கின்றனர்.
திருக்கோவிலுக்குச் செல்ல இயலாத
சூழலில், இருக்கின்ற இடத்திலேயே, இல்லத்திலோ அல்லது பணி இடங்களிலோ அக வழிபாடு இயற்றலாம் என்பதனையும்
திருமுறைகள் குறிப்பிடுகின்றன. இறைவனை ஆறு வேளைதான் தொழ வேண்டும் என்பது இல்லாமல்
எத்தனை வேளை வேண்டுமானாலும் வழிபடலாம். ஒவ்வொரு முறையும் நாம் உணவு உண்பதற்கு
முன்பு இறைவனை வழிபட்டால், இறைவனை வழிபடும் கொள்கைப் பிடிப்பில் தவறாமல் நிற்கலாம் என்பதனை, “உண்பதன் முன் மலர் பறித்து
இட்டு உண்ணுங்கள்” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்.
இயன்றால் நாள்தோறும்
குடும்பத்தோடு திருக்கோவிலுக்குச் செல்வதே சிறப்பு என்பதனைக் கருத்தில் கொள்வோம்.
அதிலும் பூசனை நேரத்திற்குச் செல்வோம். இயலாவிடில் இயன்ற நாட்களிலாவது
திருக்கோவிலுக்குச் செல்லும் செல்லிம் வழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்வோம்.
திருக்கோவில்தோறும் வீற்றிருந்து தன் திருவருளை வாறி வழங்கும் பெருமானின்
திருக்கோயில்களைத் தேடிச் சென்று அவனின் திருவருளைப் பெறுவோம்.
இன்பமே எந்நாளும் துன்பம்
இல்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக