திருக்கோவில் வழிபாடு
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று ஔவை பிராட்டி குறிப்பிடுவார். “மாலற நேயமும் மலிந்தவர் வேடமும், ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” என்று சித்தாந்த சைவ மெய்கண்ட
நூல்களின் தலைமணி நூலான, மெய்கண்டாரின் சிவஞான போதம் குறிப்பிடும்.
மெய்யன்பு உடைய அடியார்களின் திருவேடத்தையும் சிவனின் திருக்கோவிலையும் பரம்பொருளின்
வடிவாகவே கண்டு வணங்க வேண்டும் என்று சிவஞானபோதம் குறிப்பிடுகின்றது.
“நாடும் நகரமும் நற்றிருக் கோவிலும், தேடித் திரிந்து சிவபெருமான் என்று, பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின், கூடிய நெஞ்சத்துக் கோவிலாக் கொள்வனே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
திருக்கோவில்களைத் தேடிச் சென்று, திருமுறைகளை ஓதி வழிபட்டால் நம்
உள்ளம் ஒன்று படும். ஒன்று பட்ட உள்ளத்தைப் பெருமான் அவன் வாழும் கோவிலாக் கொள்வான்
என்று திருமூலர் குறிப்பிடுவார்.
திருஞானசம்பந்தப் பெருமானும், “தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின், நாடிவந்தவர் நம்மையும் ஆட்கொள்வர், ஆடிப்பாடி அண்ணாமலை கைத்தொழ, ஓடிப்போம் நமது உள்ள வினைகளே” என்று குறிப்பிடுவார். திருக்கோவில்களைத் தேடிச் சென்று வழிபட்டால் நம்மையும் ஒரு
பொருட்டாக எண்ணிப் பெருமான் அருள் செய்வான். ஆடியும் பாடியும் அப்பெருமானை வழிபட்டால்
நம் உள்ளத்தில் அறியாமை நீங்கிப் பெருமானின் அருள் ஒளி சிறக்கும் என்று குறிப்பிடுகின்றார்.
உண்மையான சமய நெறியைப் பின்பற்றி, இறைவனை அடைந்து காட்டிய நாயன்மார்களும் அருளாளர்களும் திருக்கோவில் வழிபாட்டைத்
தவறாது மேற்கொண்டுள்ளனர். மூன்று அகவையே அடைந்த திருஞானசம்பந்தர் முதல் எண்பத்தொரு
அகவையை எட்டிய திருநாவுக்கரசர் வரை நடந்தே திருக்கோவில்தொரும் சென்று வழிபட்டனர். சைவ
அடியார்களின் வரலாற்றினைக் குறிப்பிடும் தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணத்தில், திருஞானசம்பந்தரையும் திருநாவுக்கரசரையும் சுந்தரரையும் திருக்கோவிலுக்கு வரச்
சொல்லியே பெருமான் வெளிப்பட்டு அருளியிருக்கின்றான். திருக்கோயில்களிலேயே பெரும்பாலான
அருள் நிகழ்ச்சிகள் அருளாளர்களின் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. திருமுறை ஆசிரியர்கள்
திருக்கோவில்களிலேயே திருமுறைகளை அருளியிருக்கின்றனர். இதனால் திருக்கோவில் வழிபாட்டின்
இன்றியமையாமை புலப்படுகின்றது.
உயிர் முற்றப் பெற்ற நாயன்மார்களும்
(சீவன் முத்தர்கள்), திருமூலர், தாயுமானவர், கருவூர்த்தேவர் போன்ற சித்தர்களும்
தவறாமல் திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இன்று
திருக்கோயிவில்களுக்குச் சென்று வழிபடுதல் அறுகி வருகின்றது. திருக்கோவில்களுக்குச் செல்லத்
தேவையில்லை என்ற கருத்து பெருகி வருகின்றது. திருக்கோவில்களுக்குச் செல்பவர்கள் சமயநெறியில்
பிந்தங்கியவர்கள் அல்லது முதிர்ச்சிப் பெறாதவர்கள் என்று எண்ணப்படுகிறது. சிலர் திருக்கோவில்களுக்குச்
செல்லாமல் தத்தம் குருமார்களுக்குக் கோவில் அமைத்து அங்கு அவர்களின் குருமார்களை வழிபடுகின்றனர்.
இன்னும் சிலர் திருக்கோவில்களுக்குச் செல்லாமல் பலவாறான பயிற்சி மையங்களிலேயே தங்களின்
வாழ்நாளைக் கழித்து விடுகின்றனர்.
பசுவின் உடலில் உள்ள குருதிதான்
பாலாக மாறினாலும் பசுவின் மடியில் கறந்தால்தான் அது பாலாகக் கிடைப்பதுபோல் பரம்பொருள்
எங்கும் எதிலும் விரவி இருப்பினும் அப்பரம்பொருளின் திருவருள் வெளிப்பட்டு விளங்கும்
அருள்மையமாகத் திருக்கோவிலை அறிவியல் ஆராய்ச்சியுடனும் அருள் விளக்கத்துடனும் நம் முன்னோர்
அமைத்துள்ளனர்.
உயிரை ஒருமுகப்படுத்தும் நிலையமாக
(ஆ+லயம்) விளங்க வேண்டியத் திருக்கோவில்கள், அந்நோக்கத்தில் இருந்து தவறி, மன அமைதிக்கும் ஆறுதலுக்கும் இறை அன்பினைச் செலுத்துவதற்கும் வழிவிடாமல் ஆர்ப்பாட்டங்களுக்கும்
ஆரவாரத்திற்கும் பகட்டிற்கும் வணிகத்திற்கும் துணைபோகின்ற கூடாரமாக மாறிவிட்டச் சூழலும்
இன்று பலர் திருக்கோவில்களுக்குச் செல்வதனைத் தவிர்த்து விட்டதற்குக் கரணியமாய் அமைந்து
விடுகிறது. எனினும் திருக்கோவில் வழிபாடு இன்றியமையாதது என்று சைவ மெய்கண்ட நூல்களும்
திருமுறைகளும் சிவ ஆகமங்களும் அடியார்களின் வரலாறுகளும் குறிப்பிடுவதால் எக்கரணியத்தையும்
முன்வைக்காமல் திருக்கோவில் வழிபாட்டினைச் செய்வதற்குக் கடப்பாடு உடையவர்கள் ஆகின்றோம்.
குடும்பத்தோடு திருக்கோவில்களுக்குச் செல்வோம், அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாய்
அமைவோம்.
இன்பமே
எந்நாளும் துன்பம் இல்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக