சனி, 8 ஏப்ரல், 2017

5. பங்குனி உத்திர திருநாள்/ Pangguni Uttiram

பங்குனி உத்திர திருநாள்





            பங்குனி உத்திரம் என்றாலே நினைவுக்கு வருவது திருக்கல்யாணம் அல்லது தெய்வத்திருமணங்கள்தான். பங்குனி உத்திரத்தைத் திருமண விரத நாள் என்றும் அழைப்பர். சிவன், முருகன், அம்பாள் போன்ற தெய்வங்களுக்குத் திருக்கல்யாணம் செய்வித்து, இறைவனைத் திருமணக்கோலத்தில் கண்டு வழிபடும் நாள் இப்பங்குனி உத்திரத் திருநாள்.
புராண குறிப்புக்கள்
                ஆணவத்தினாலே சிவனை இகழ்ந்த தக்கனுக்குத் தாட்சாயினி என்ற பெயருடன் பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தினைப் போக்கிக் கொள்ள, பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாகத் தோன்றினாள் உமை அம்மை. அவள் காஞ்சியில் கம்பை நதிக்கரையில் மாமரத்தினடியில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டாள். உயிர்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சாதனைகளின் வழி உள்ளன்போடு சிவபூசனையைச் செய்ய வேண்டும் என்பதனை உலகினுக்குக் காட்ட அம்மை அவ்வாறு வழிபாடு செய்ய இறைவன் அதற்குத் துணையாக கம்பை நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்கின்றார். மணலால் செய்த சிவலிங்கம் சிதைந்து விடுமே என்று அன்பால் பதறி உமையம்மை சிவலிங்கத்தை மார்புடன் ஆறத்தழுவினாள். அப்போது இறைவன் வெளிப்பட்டு உமையம்மையை மணந்தார். அந்நாளே திருக்கல்யாண நாளான பங்குனி உத்திரத் திருநாள் என்று கந்தபுராணம் மூலமும் பெரிய புராணம் மூலமும் அறிய முடிகின்றதுசூரபதுமன் போன்ற தேவர்களை அழித்து தெய்வயானையை முருகன் திருக்கல்யாணம் செய்த நாள் பங்குனி உத்திரத் திருநாள் என்று கந்தபுராணம் குறிப்பிடுகின்றது. பங்குனி உத்திரத் திருநாள் அன்றுதான் திருநந்திதேவரின் திருக்கல்யாணமும் ஐயாறப்பரால் திருமழபாடியில் நடத்துவிக்கப்பட்டது என்ற செய்தியும் கிடைக்கப்பெறுகின்றது.
திருக்கல்யாண தத்துவம்
                 திருவருளே இறைவனுக்குத் திருமேனி அல்லது உடம்பாக அமைவதனால் இறைவனுக்கு மனிதர்களைப் போன்று திருமணம் தேவையில்லைஇறைவன் தமது சிறப்பு நிலையில் தன் திருவருளை அல்லது சக்தியை தன்னுள் ஒடுக்கி வைத்துள்ளார். உயிர்களுக்கு அருள்புரிவான் வேண்டி அவர் தம்மிலிருந்து தன் திருவருளை வெளிப்படுத்தி அதனுடன் பொருந்தி ஐந்தொழில்களை நிகழ்த்துவதாய் உலகமும் உயிர்களும் நலம் பெறுகின்றன என்று மெய்கண்ட சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறு இறைவன் தன் திருவருளோடு இணைவதையே பலவடிவங்களில் உருவநிலையில் தோன்றி அருளும் இறைவனுக்குத் திருக்கல்யாணம் என்கிறோம். அதனையே புராணங்களும் பாமரரும் விளங்கிக் கொள்ளும் வகையில் கூறுகின்றன.
            இறைவன் தன் திருவருளோடு இணையாவிட்டால் உலக இயக்கமும் நின்றுவிடும் என்பதைத் திருச்சாழலில்,  “தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற்றம்பலவன்   பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி   பெண்பால் உகந்திலனேல், பேதாய்! இருநிலத்தோர்   விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோஎன்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவார். அதாவது தென்திசை நோக்கித் திருநடனம் ஆடும் தில்லைச் சிற்றம்பலவன், தம்முடைய இடப்பக்கத்தில் உமையம்மையை வைத்திராவிட்டால், மண்ணில் வாழும் உயிர்கள் விண்ணுலகை அடைவதற்காக முழுயோக நிலையைக் கைக்கொள்வர்; இறுதியில் உலக இயக்கம் நின்றுவிடும் என்று கூறிப்பிடுகின்றார். எனவே உலகமும் உயிர்களும் தொடர்ந்து இயங்க வேண்டும்; அதற்கு இறைவன் அவன் திருவருளோடு இணைய வேண்டும் என்ற வேண்டுதலுக்காகவும் நமக்கு இறைவன் ஆற்றுகின்ற பேரருளை நினைவு படுத்திக் கொள்ளவுமே தெய்வங்களுக்குத் திருக்கல்யாணங்களை நடத்துகின்றோம். எனவே திருக்கல்யாணம் நிகழ்கின்றபோது வெறும் திருமண சடங்குகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு அதன் உண்மைப் பொருளை மக்களுக்கு எடுத்துக் கூறாமல் விடுவது நம் பொருள்பொதிந்த உண்மைச் சைவத்திற்கு ஏற்றம் தராது.

திருக்கல்யாணத்திற்குச் சீர் எடுப்பது, மொய்ப்பணம் வைப்பது, மஞ்சள் அரிசித் தூவுவது, தாலிக்கட்டுவது என்பதில் மட்டும் கவனத்தைச் செலுத்தாது அன்றைய தினத்தில் ஆலயத்தில் வழிபடும் அன்பர்களுக்கு உண்மை நெறியினை உணர்த்துவதற்கு ஆவன செய்வதும் இன்றியமையாதது.
பங்குனி உத்திர சிந்தனை
            இறைவன் திருக்கல்யாணத்தைக் காண்கின்றபோது இறைவன் தன் திருவருளுடன் இணைந்து உலகமும் உயிர்களும் வாழ அருள்புரிவதைப் போன்று திருமணமான அன்பர்கள் தங்கள் திருமணவாழ்வில் இல்லறத்தார்க்குத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ள ஐந்து கடமைகளைச் செவ்வன செய்கின்றோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அதாவது தென்புலத்தார், தெய்வம், ஒக்கல், விருந்து, தான் என்ற ஐந்து பிரிவினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வன செய்கின்றோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்இறைவன் எதையும் எதிர்பார்க்காமல் உலகினுக்கும் உயிர்களுக்கும் செய்யும் உதவியினை எண்ணி நன்றியினால் வழிபட வேண்டும்பங்குனி உத்திரத்தன்று ஆண்டுதோறும் தவறாமல் அடியார்களுக்கு உணவளித்தத் தொண்டினைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அவர் மனைவி பரவை நாச்சியாரும் செய்வதைப் போன்று இதுபோன்ற நாட்களிலாவது ஏழை எளியவர்க்கு நம்மால் இயன்ற உதவிகளையோ, உணவையோ இறையுணர்வோடு கொடுத்து மகிழ வேண்டும்.
            பங்குனி உத்திரத் திருவிழாவைக் காணவேண்டும், இறைவனை வழிபட வேண்டும் என்ற பேராவலில் சங்கிலி நாச்சியாரைப் பிரியமாட்டேன் என்று உறுதி கூறியிருந்த சுந்தரர் அதை மீறி சென்றதைப் போன்று பேராவலுடன் குடும்பத்தோடு திருநாட்காலங்களிலாவது கோவிலுக்குச் சென்று நம் எதிர்கால தலைமுறையினருக்கு நம் சமயத்தையும் பண்பாட்டையும் புகட்ட வேண்டும். எனவேதான் சம்பந்தரும் சிறு வயதிலேயே பூநாகம் தீண்டி இறந்துவிட்டப் பூம்பாவையைப் பார்த்து, “பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள், ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்என்று பரிவோடுபாடி அவளை உயிர்பிக்கின்றார். அதாவது திருமுறைகள் ஒலிக்க, இசைக் கருவிகள் முழங்க உள்ளத்தில் பக்திக் கிளர்ச்சியூட்டும் பங்குனி உத்திரப் பெருவிழாவைக் காணாமல் போய்விடுவாயோ என்று பொருள்படுகின்றது. அடியார்கள் சிறப்பித்துக் கூறியுள்ள பெருவிழா பங்குனி உத்திரப் பெருவிழா.
            தமிழ்நாட்டில் காஞ்சி ஏகம்பநாதர் கோயிலிலும் திருவாரூரிலும், திருப்பரங்குன்றத்திலும் இவ்விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. வாழ்விற்குத் தேவையான பல உண்மைகளை மறைமுகமாக உணர்ந்திடும் நம் சமயவிழாக்களை அறிந்து உண்மைச் சைவர்களாக வாழ்வோமாக!
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

திருமுறைச் செம்மல், சித்தாந்த இரத்தினம், திருமுறைத் தொண்டர்
திரு . தர்மலிங்கம் எம்.

(தலைவர், மலேசிய சைவ நற்பணிக் கழகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக